ரெட்ரோ – விமர்சனம்!

சூர்யா, கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படம் “ரெட்ரோ”. கார்த்திக் சுப்பாராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா சமீப காலங்களில் பார்க்காத ஒரு சூர்யாவாக கண் முன் வந்து நிற்கிறார். காதல் கதையை சுற்றிய ஆக்ஷன் படம் என இயக்குனர் சொன்னாலும் கண்டிப்பாக ஆக்ஷன் படம் முழுக்க இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்தபோதே புரிந்தது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கைக்குழந்தையாக இருக்கும்போதே தாய், தந்தை இல்லாமல் தனித்து விடப்பட்ட சூர்யாவை எடுத்து வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜின் மனைவி சுவாசிகா. பெரிதாக பாசம் இல்லாத ஜோஜூ ஜார்ஜ் அடிதடிக்காக மகனாக உடன் வைத்துக் கொள்கிறார். காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால், பூஜா ஹெக்டேவை காப்பாற்ற தனது வளர்ப்பு அப்பாவின் கையையே துண்டாக வெட்டி விடுகிறார். அடிதடியை நேரில் பார்த்த பூஜா சூர்யாவை விட்டு விலகுகிறார். சூர்யாவும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார். 5 ஆண்டுகள் கழித்து பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர, அந்தமான் செல்லும் சூர்யா அங்கே தன் பழைய எதிரிகளோடு சேர்த்து புது எதிரியையும் எதிர்கொள்ள நேர்கிறது. அவர் அந்த சூழலை எப்படி கையாண்டார், காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

பாரிவேல் கண்ணன் என்ற ஒரே கதாபாத்திரத்தில், பலவிதமான தன்மைகளை வெளிப்படுத்தி தான் ஒரு நடிப்பு அரக்கன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சிரிக்க வரல என அந்த கதாபாத்திரத்தில் ஆகட்டும், பின் மெல்ல சிரிக்க துவங்கும் அந்த இடமாகட்டும், இன விடுதலைக்காக நிற்கும் அந்த இடமாகட்டும் சூர்யாவுக்கு நடிப்புக்கு தீனி போட்ட படமாக இது அமைந்திருக்கிறது.

நாயகியாக பூஜா ஹெக்டே. மற்ற படங்களை போல கவர்ச்சி நாயகியாக வந்து போகாமல் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக, துளியும் கவர்ச்சி இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் டல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டே இப்படி கூட நடிப்பாரா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது இந்த படம். அப்படி ஒரு நல்ல நடிப்பு. இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ் மிரட்டலான நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், விது, தமிழ், கஜராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் படத்தின் தன்மை ரெட்ரோ என்ற தலைப்புக்கேற்ப அந்த காலத்தை அழகாக பிரதிபலித்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளை படம் பிடித்த விதமும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட், கூடுதலாக பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது இசை.

கார்த்திக் சுப்பாராஜ் வழக்கம் போல தனது ஸ்டைலில் நல்ல ஒரு படத்தை தர முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதிலும் பேட்ட படத்தில் ரஜினியை எப்படி இளமையாக, எனர்ஜியாக காட்டியிருந்தாரே அப்படி இந்த படத்தில் சூர்யாவை படம் முழுக்க மிக சிறப்பாக காட்டி ரசிகர்களுக்கும் புது சூர்யாவை தந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் கதை போரை நோக்கி சென்று வேறு ஒரு களத்துடன் முடிந்திருக்கிறது. அத்துடன் த மேக்கிங் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு திரை அனுபவத்தை கொடுத்திருக்கிறார். படம் முழுக்க அத்தனை சண்டைக்காட்சிகள் இருந்தாலும் அவற்றை கொஞ்சமும் போர் அடிக்கா வண்ணம் வித்தியாசமாக தந்திருக்கிறார். மொத்தத்தில் சூர்யாவுக்கு நல்ல ஒரு படத்தோடு ஒரு வெற்றிப் படத்தையும் தந்திருக்கிறார், குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *