ராஜபுத்திரன் – விமர்சனம்!

எட்டு தோட்டாக்கள், ஜீவி, மெமரீஸ், பகலறியான், ஜோதி என வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களை மட்டுமே தேடித் தேடி நடிக்கும் நடிகர் வெற்றி கமெர்சியல் ரூட்டில் 6 பாடல், சண்டைக்காட்சி, காமெடி, எமோஷன் என கலந்து கட்டி அடிக்கும் ஒரு பக்கா கமெர்சியலாக நடித்திருக்கும் படம் தான் “ராஜபுத்திரன்”. அறிமுக இயக்குனர் மகா கந்தன் இயக்கியுள்ள இந்த படம் வெற்றிக்கு கமெர்சியல் ரூட்டிலும் வெற்றியை தேடித் தந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் வளம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் தந்தை பிரபு தன் மகன் வெற்றி மீது உயிரையே வைத்துள்ளார். மகனை வேலைக்கு கூட அனுப்பாமல் தன் கண் பார்வையிலேயே வைத்து வளர்த்து வருகிறார். விவசாயம் பொய்த்து வட்டிக்கு பணம் வாங்கும் நிலையிலும் கூட மகனை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார். தந்தையின் கஷ்டத்தை பார்க்கும் வெற்றி அவருக்கு தெரியாமல் ஒரு வேலையை செய்ய முடிவெடுத்து வில்லன் கோமல் குமாரிடம் வேலைக்கு செல்கிறார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் குடும்பத்திற்கு வரி கட்டாமல் பணத்தை அனுப்ப, Illegal முறையில் அனுப்ப, அதை சம்பந்தப்பட்ட ஆட்களின் வீட்டிற்கு சென்று சேர்க்கும் வேலையில் சேர்கிறார் வெற்றி.

இதற்கிடையில் நாயகி கிருஷ்ண பிரியாவுடன் காதல் மலர்கிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் வெற்றி பணத்தை எடுத்துச் செல்லும் வழியில் பணத்தை ஒருவன் திருடிச் சென்று விட வில்லன் அந்த பணத்தை திருப்பித் தரச் சொல்லி கெடு விதிக்கிறார். அதன் பிறகு அந்த சம்பவங்கள் பிரபுவுக்கு தெரிய வர, அந்த பிரச்சினையில் இருந்து வெற்றி எப்படி வெளியில் வந்தார்? அந்த பணத்தை திருடியவன் யார்? வெற்றியின் காதல் கைகூடியதா? அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

அதிகம் பேசாத கதைக்கு தேவையான நடிப்பையே வழங்கி வந்த வெற்றி கலகலப்பான, ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் காதல், காமெடி,ஆக்ஷன், எமோஷன் என கலந்து கட்டி அடித்திருக்கிறார். கிராமத்தி கதையில் அந்த ஊர் இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். பருத்து வீரன் கார்த்தி போன்ற ஒரு ரவுசான இளைஞன் கதாபாத்திரம். புது அனுபவம். நாயகி கிருஷ்ண பிரியா, முதல் படத்திலேயே தன் அழகான நடிப்பால் நம்மை அசரடிக்கிறார். வெற்றி, கிருஷ்ணபிரியா காதல் காட்சிகள் எல்லாமே அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது. நடிக்கும் திறமை கொண்ட ஒரு நல்ல நடிகை கிடைத்த உணர்வை தந்திருக்கிறார்.

வெற்றியின் தந்தையாக பிரபு, ஆனாலும் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கான கதாபாத்திரம். அன்பான அப்பாவாக, ஆக்ரோஷமான அப்பாவாக என கம்பீரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். வில்லனாக கோமல் குமார். பில்டப் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பில்டப்புக்கு பொருத்தமாகவே இருக்கிறார். ஆனால் அவரின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எழுதியிருந்தால் இன்னும் ஜொலித்திருப்பார். லிவிங்ஸ்டன், RV உதயகுமார், மன்சூர் அலிகான், தங்கதுரை என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.

நௌஃபல் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே இனிமை. கிராமத்து படத்துக்கு ஏற்ற நல்ல ரசிக்கும்படியான பாடல்களையே கொடுத்திருக்கிறார். டி.ஆர். பாடும் உம்மா தரேன் பாடல் பி,சி ரசிகர்களும்ம் செம்ம ட்ரீட். பின்னணி இசையும் படத்துக்கு துணையாக அமைந்திருக்கிறது.

ஆலிவர் டெனி ஒளிப்பதிவு இராமநாதபுரத்தை மிக அழகாகவும், இயல்பாகவும் காட்டியிருக்கிறது. 1990கள் போன்ற உணர்வை அழகாக பிரதிபலித்திருக்கிறது. பாடல் காட்சிகளையும் மிக அழகாக தந்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் மகா கந்தன், ஒரு அப்பா, மகன் பாசப்பிணைப்பை சொல்லும் ஒரு படத்தை நல்ல கிராமத்து வாழ்வியலுடன் தந்திருக்கிறார். அப்பாவுக்காக மகன் வந்து நிற்பது, மகனுக்காக அப்பா வந்து நிற்பதும் என படம் முழுக்க நெகிழ வைக்கிறார்கள். ஆனாலும் மகனை வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்ற பிடிவாதம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. கதாநாயகிக்கு கதையில் மிகுந்த முக்கியத்துவத்தை தந்ததோடு, நாயகியிடம் நல்ல ஒரு நடிப்பை வரவழைத்து அவருக்கு ஒரு மறக்க முடியாத படமாகவே தந்திருக்கிறார். பழைய கதை, பழைய ட்ரீட்மெண்ட் என இருந்தாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு நல்ல ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் மகா கந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *