அறிமுக இயக்குனர் மஹா கந்தன் இயக்கத்தில் வெற்றி, இளைய திலகம் பிரபு, கோமல் குமார் ஆகியோர் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அப்போது பேசிய இளைய திலகம் பிரபு கூறும்போது, “இதுவரை நான் 74 புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் நாயகன் வெற்றியின் அப்பாவாக நடித்திருக்கிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள். எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது. இந்த படத்தில் என் அண்ணன் டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ரொம்ப எனர்ஜியான பாடல். அந்த பாடலுக்கு என்னை ஆடச் சொன்னார்கள். நான் ஆட மாட்டேன் என்றேன். ஆனாலும் என்னை ஆட வைத்து விட்டார்கள். இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. நாயகி கிருஷ்ண பிரியா. நன்றாக நடித்திருக்கிறார். கதைப்பபடி எனக்கும், அவருக்கும் தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும். படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா மீதும், என் மீதும், என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குனர்கள் காமெடி நடிகர்களாக, குணசித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். மே மாதம் 30ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும், நிச்சயம் பாருங்கள்” என்றார்.
அதே விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “அடுத்து தமிழ் நாட்டை ஒரு நடிகன் தான் ஆளப் போகிறாரன் என போகிற போக்கில் ஒரு வெடியை போட்டு விட்டு போனார். அவர் மேலும் கூறும் போது, “மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை. எந்த ஆட்சி வந்தாலும் சரி. அடுத்து விஜய் வருகிறாரா, ஓட்டு போடுற எல்லா குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்ல போடுவோம். அதை வைத்து நீங்க வியாபாரம் பண்ணுங்க. அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும். அப்படி செய்தால் விஜய்க்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, கே.ஆர்., இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், வசந்த், நந்தா பெரியசாமி, பேரரசு, நடிகர் ஆரி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.