பொதுவாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் தங்களது மைல் கல் படங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிக பிரமாண்டமான படமாக மிகப்பெரிய இயக்குனர், மிகப்பெரிய நாயகி, முன்னணி இசையமைப்பாளர் என மிகப்பெரிய படமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அணுகுவார்கள். ஆனாலும் ஒரு சில ஹீரோக்களின் படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை குவித்து உள்ளன. பெரும்பாலான ஹீரோக்களின் படங்கள் தோல்வியை தழுவி உள்ளன. அதில் அஜித்தின் மங்காத்தா, சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா போன்ற படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படமாக ராயன் படத்தை தானே எழுதி இயக்கியுள்ளார். ஐம்பதாவது படம் என்பதால் பாட்டு, ஃபைட், பஞ்ச் டயலாக் என தன்னை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி படத்தை எடுக்காமல் தன் மனதுக்கு பிடித்தவாறு தானே கதை எழுதி இயக்கி இருக்கிறார் தனுஷ். அந்த வகையில் தனுஷின் இந்த ஐம்பதாவது படம் மிகப்பெரிய வெற்றி அடையுமா? தனுஷூக்கு மிக முக்கியமான படமாக அமையுமா? பார்ப்போம்.
படத்தின் கதைப்படி, தனுஷூக்கு இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு தங்கை. சிறுவயதில் அவர்களின் பெற்றோர் ஊருக்கு சென்று விட்டு வருவதாக கிளம்பி சென்று, வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தன் தங்கை மற்றும் தம்பிகளை காப்பாற்றும் பொறுப்பு தனுஷ் மீது விழுகிறது. மிகவும் சிரமப்பட்டு இரண்டு தம்பி மற்றும் தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். வடசென்னையில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். தன் குடும்பத்துக்காக எந்தவித வம்பு, தும்புக்கும் செல்லாமல் மிகவும் அமைதியான முறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் முதல் தம்பியான சந்தீப் கிஷன் ஊர்வம்பை இழுத்துக் கொண்டு வர, இரண்டாவது தம்பியான காளிதாஸ் ஜெயராம் கல்லூரி தேர்தலில் நின்று அங்கேயும் பிரச்சனைகளை கொண்டு வர இதனால் கடுப்பான தனுஷ் அவர்களை அடக்கி வைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த தம்பிகளால் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை தனுஷ் சந்திக்க நேர்கிறது. அந்த பிரச்சினையில் இருந்து தனுஷ் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? தம்பிகளை எப்படி வழி நடத்தினார்? தங்கைக்கு திருமணம் முடித்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் தனுஷ், அவருக்கு ஐம்பதாவது படம். பொதுவாக 50வது படம் என்றாலே ஹீரோக்கள் மாஸ் சீன்ஸ், ஃபைட், டான்ஸ், பஞ்ச் டயலாக் என அதிரடி காட்ட முயற்சி செய்வார்கள். ஆனால் தனுஷ் இவற்றை எதுவும் செய்யாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்கவே செய்கிறார். ஆனால் கதையின் போக்கு அவருக்கான சில மாஸ் காட்சிகள் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக இன்டர்வல் காட்சியிலும் எஸ் ஜே சூர்யாவுடன் முதல் முறையாக சந்திப்பு, கிளைமாக்ஸ் காட்சி என இப்படி பல காட்சிகள் இயல்பாகவே தனுஷ் கதாபாத்திரத்தின் மாஸை கூட்டுகிறது. வழக்கமான பஞ்ச் டயலாக், தேவையில்லாத பில்டப் காட்சிகள், குத்துப்பாட்டு என எந்தவித அலட்டலும் இல்லாமல் குறிப்பாக தனக்கென ஜோடி இல்லாமல் தனுஷ் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. கதை மேல் மட்டுமே அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
வில்லனாக வரும் எஸ் ஜே சூர்யா முதல் பாதியில் அவ்வளவாக காட்சிகளே இல்லை என்று சொல்லலாம். அதுவே இரண்டாம் பாதியில் தனுஷை சந்தித்த பின் அவருக்கும் தனுஷுக்கும் இடையிலான மோதல் போன்ற காட்சிகளில் எஸ் ஜே சூர்யா ஸ்கோர் செய்கிறார். முந்தைய படங்களில் வந்த வழக்கமான வில்லத்தனத்தை விட இதில் மிகவும் புதுமையாக பலவித காட்சிகளில் நடித்து அப்ளாஸை அள்ளுகிறார். குறிப்பாக இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு அவர் செய்யும் சேட்டை கலகலக்க வைக்கிறது.
தனுஷின் தம்பியாக சந்தீப் கிஷன் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி சந்தீப் இடையேயான காதல் காட்சிகளும் ரவுசு. முதல் பாதி முழுக்க எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். இரண்டாம் பாதியில் அவர் கதாபாத்திரம் வேறு ஒரு பரிமாணத்தை எடுக்கும்போது அந்த நடிப்பையும் சிறப்பாகவே செய்துள்ளார். இன்னொரு தம்பியாக காளிதாஸ் ஜெயராம் கல்லூரி படிக்கும் இளைஞனாக, அண்ணன் மீது மரியாதை வைத்திருக்கும் தம்பியாக, சிறப்பாகவே நடித்துள்ளார். இந்த படத்தில் மிகவும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு கதாபாத்திரம் என்றால் துஷாரா விஜயன் நடித்துள்ள தனுஷின் தங்கை கதாபாத்திரம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை தனுஷூக்கு இணையாகவே நடிக்கும் அளவுக்கு பலவித இடங்கள் உள்ளன. அவை அத்தனையும் கனகச்சிதமாக செய்து ஸ்கோர் செய்து சிறந்த நடிகை என்ற பெயரில் இந்த படத்தில் பெற்று விடுகிறார். குறிப்பாக அவர் வரும் சில காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது என்றே சொல்லலாம்.
இவர்களுடன் செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், வரலட்சுமி சரத்குமார், திலீபன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். செல்வராகவனுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம், அதை உணர்ந்து தன்னால் முடிந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது. படத்தின் லைட்டிங், கேமரா ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் வரும் பெரும்பாலான இரவுக் காட்சிகளை ஓம் பிரகாஷ் மிகச் சிறப்பாக படம் பிடித்துள்ளார். ஜி கே பிரசன்னாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் நீளம் 2:30 மணி நேரம் என்பது மிகப்பெரிய பலம்.
அடுத்து படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பான இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். பாடல்கள் அனைத்தும் படத்தின் உயிர்நாடியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக ஓ ராயா பாடல், அடங்காத அசுரன் பாடல் ஆகியவை படத்தில் அழுத்தமான இடங்களில் வந்து கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. கதைக்கு உயிரோட்டமாகவும் அமைகிறது. வாட்டர் பாக்கெட் பாடல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஜாலியான பாடல். பின்னணி இசையில் ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை அபாரம். கிளைமாக்ஸில் தனியாக ஒரு சில வரிகள் வரும், அந்த பாடல் வரிகளும் அருமை. அதோடு உசுரே நீதானே என ஏ ஆர் ரகுமான் பாடும் அந்த பாடல் வரிகள் படத்தில் வரும் இடமும் மிகப் பிரமாதம்.
இயக்குனர் தனுஷ், ப பாண்டி படத்தில் ஒரு ஃபீல்குட் படத்தை இயக்கிய தனுஷ் இந்த படத்தில் எடுத்திருக்கும் கதைக்களமும், கதையும், கதை மாந்தர்களும் அப்படியே வித்தியாசமானது. வடசென்னை பின்னணியில் முழுக்க வன்முறை காட்சிகளுடன் இயக்குனராக இன்னொரு பரிமாணத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். அந்த வகையில் நடிகர்களின் தேர்வு, மேக்கிங் போன்றவற்றில் இயக்குனராக தன்னுடைய முத்திரை பதித்துள்ளார் தனுஷ். ஆனால் அதே சமயம் கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. படத்தில் ஒரு சில இடங்களில் தேவையற்ற இடங்களில் வன்முறை காட்சிகள் வந்து போவதும் அவற்றை தவிர்த்து இருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை. வலுவான வில்லன் அமையவில்லையோ என்ற ஒரு ஏக்கமும் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது. மற்றபடி படத்தின் நாயகன் தனுஷ் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருக்காகவே இந்த ஐம்பதாவது படத்தை கண்டிப்பாக ஒருமுறை தியேட்டரில் சென்று பார்க்கலாம். இந்த படம் குழந்தைகளுக்கானது அல்ல, 18 வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களுக்கானது.