மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட, லைவ் ஆக்ஷன் அனிமேஷன் நகைச்சுவை படமான ‘பேடிங்டன் (2014)’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. அதன் வெற்றியின் அடிப்படையில், ‘பேடிங்டன் 2 (2017)’ என இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார்.
முதல் படம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மென்மையான மற்றும் கண்ணியமான கரடியைப் பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக பேடிங்டன் சிறையில் அடைக்கப்படுகிறது. விடுதலை அடைய தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.
தற்போது அப்படவரிசையில் மூன்றாவது பாகமாக ‘பேடிங்டன் இன் பெரு’ எனும் படம் வெளியாகிறது. பேடிங்டனின் அத்தையைக் கண்டுபிடிக்க ப்ரெளன் குடும்பம் பெருவியன் காடுகளுக்குள் செல்கிறது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் டூகுல் வில்சன். குடும்பங்கள் கொண்டாடும் வகையில் முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படம், ஆறுகள், பழங்கால இடிபாடுகளுடனான ஒரு சாகசப் பயணத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.