நரிவேட்டை – விமர்சனம்!

தமிழ் சினிமாவை விட ஆழமான அரசியலை பேசும் படங்கள் மலையாளத்தில் தான் அதிகம் வெளிவரும். தமிழ் சினிமாவில் பேசத் தயங்கும் பல விஷயங்களையும் மலையாள கலைஞர்கள் மிக தைரியமாக திரையில் பேசுவார்கள். அந்த வகையில் அதிகாரம் எளியவர்களை எவ்வாறு ஒடுக்கும் என்பதையும், காவல்துறை அத்துமீறலை பற்றிய படங்களும் நிறைய வெளியாகி உள்ளன. தற்போது வெளியாகி உள்ள நரிவேட்டை திரைப்படமும் அந்த விஷயத்தை பேசிய ஒரு படமாக வெளியாகி உள்ளது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மலைவாழ் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரத்துக்காகவும், இருப்பிட தேவைக்காகவும் சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பெரிய அளவில் ஒரு போராட்டத்தை கையிலெடுக்க முடிவெடுக்கிறார்கள்.

அதே நேரத்தில் நாயகன் டொவினோ தாமஸ். பெரிய வேலைக்கு தான் செல்வேன் என எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி காதலித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கிடைத்த கான்ஸ்டபிள் வேலையை செய்ய வேண்டிய சூழல். போராட்டம் நடக்கும் இடத்துக்கு ஒரு படையை அனுப்ப, அதில் டொவினோ தாமஸூம் ஒருவர். அதிகார வர்க்கத்தின் பக்கம் சின்சியராக இருக்கும் டொவினோ தாமஸ் ஒரு கட்டத்தில் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை பார்க்க நேர்கிறது. அதன் பின் அவர் என்ன முடிவெடுத்தார்? அந்த மக்களின் போராட்டம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

டொவினோ தாமஸ். வழக்கம் போல எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்பவர் இந்த படத்திலும் போலீஸ் கான்ஸிடபுள் ஆக பல நேரங்களில் அதீத வெறுப்புடனும், சில நேரங்களில் இயலாமையுடனும், சில நேரங்களில் தவிப்புடனும் இருக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

சேரன் உயர் அதிகாரியாக, அந்த போராட்டத்தை கண்காணிக்கும் தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். ஆரம்பத்தில் ஒரு முகம், போகப் போக உண்மை முகம் என இரண்டு விதமான முகங்களை காட்டி நம்மை அசரடிக்கிறார். சேரன் கேரியரில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக நிற்கும் என்பது உறுதி. சுராஜ் வெஞ்சரமூடு பஷீர் எந்த காவல் துறை அதிகாரியாக வந்து நம் மனதில் பதிந்து விட்டு போகிறார். நாயகி பிரியம்வதா கிருஷ்ணன் காதல் காட்சிகளில் அழகு.

ஒளிப்பதிவாளர் விஜய் ஒளிப்பதிவில் அந்த போராட்டக்களம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இரவு நேர தேயிலை தோட்ட சேஸிங் காட்சியை படமாக்கிய விதமும் நன்று. ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் மிகச்சிறப்பு.

அரசாங்கம் சொல்வதை தான் அதிகாரிகள் கேட்பார்கள். இந்த சிஸ்டத்தில் நாம எல்லாம் அப்படியே பயணிக்கணும் என்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் கொடூர உண்மையை இந்த படத்திலும் காட்டியிருக்கிறார்கள். அந்த சிஸ்டத்தை எதிர்த்து நீதியை நிலைநாட்ட முடியும் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர். முதல் பாதியில் மெயின் கதைக்கு வர வெகு நேரம் எடுத்துக் கொண்ட உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க முகத்தில் அறைந்தாற்போல உண்மையை சொல்லும் காட்சிகள் மூலம் நம்மை ஒன்ற வைத்து விட்டர இயக்குனர். மொத்தத்தில் தமிழில் ஒரு விடுதலை போல மலையாளத்தில் இந்த நரி வேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *