நந்தன் – திரை விமர்சனம்

கத்துக்குட்டி, உடன் பிறப்பே படங்களை இயக்கிய இரா.சரவணன் சசிகுமாரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் மாற்றி இயக்கியிருக்கும் படம் “நந்தன்”. சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் சசிகுமார் உடன் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் சமூகத்துக்கு அவசியமான விஷயத்தை பேசிய இயக்குனர், இரண்டாவது படத்தில் அண்ணன், தங்கை உறவை மையப்படுத்தி எடுத்தார். இந்த நந்தன் படத்தில் மிக முக்கியமான சமூக நீதி பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அது மக்களை சென்று சேருமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பாலாஜி சக்திவேல் ஊராட்சி மன்ற தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். பொது பஞ்சாயத்து தொகுதியாக அதுவரை இருந்த தொகுதியை தனித்தொகுதியாக மாற்றி அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். சாதிய உணர்வு மேலோங்கிய பாலாஜி சக்திவேல் தலித் சமூகத்தில் ஒரு டம்மி வேட்பாளரை நிறுத்தி தன் கைபொம்மையாக செயல்படுத்தி விடலாம் என கணக்கு போடுகிறார். அடிமை போல வேலை செய்யும் சசிகுமாரை நிறுத்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் அவரை மிக கேவலமாக நடத்துகிறார்கள் ஆதிக்க சாதியினர். ஒரு கட்டத்தில் கொடி ஏற்றும் உரிமையை கூட தராமால் பாலாஜி சக்திவேலே சசிகுமாரை தள்ளி விட்டு விட்டு கொடி ஏற்றி விடுகிறார். எல்லாவற்றையும் பொறுத்துப் போகும் சசிகுமாருக்கு மிக முக்கியமான ஒரு பிரச்சினை வருகிறது. அப்போதும் அடிமையாகவே பொறுத்து போகிறாரா? எதிர்த்து நிற்கிறாரா? என்பதே மீதிக்கதை.

சசிகுமாரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்ததே அபூர்வமான விஷயம். வழக்கமாக பெரிய செல்வந்தராக, செல்வாக்கான மனிதராக, மரியாதையான நண்பராக பார்த்து பழக்கப்பட்டவரை எந்நேரமும் வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டு அழுக்கு உடையில் வலம் வரும் ஒரு கதாபாத்திரம். கைகட்டி அப்பாவியாக, தன்னை அடக்குமுறை செய்பவனுக்கே செய்முறை செய்து கொண்டு வாழும் ஒரு கதாபாத்திரம். நிச்சயம் விருது வாங்கித்தரும் அளவுக்கான ஒரு சிறந்த நடிப்பு. அதுவும் ஒரு காட்சியில் மிக மோசமான முறையில் அவமானபடுத்தப்படும் காட்சியிலும் அப்படி ஏற்று நடித்தது பாராட்டுக்குரியது.

அவரது மனைவியாக சுருதி பெரியசாமி. தன்னம்பிக்கையான ஒரு குடும்பத்தலைவியாக, நாட்டு நடப்பு தெரிந்த, நம்ம ஊரு தமிழ் பெண்ணாக கச்சிதமான தேர்வு. ஜாதி திமிர் பிடித்த ஊராட்சி மன்ற தலைவராக பாலாஜி சக்திவேல். முக பாவனைகளிலும், வசனங்களிலுமே அவரது கதாபாத்திரத்தை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். சமுத்திரகனி ஓரிரு காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார்.

சரண் ஒளிப்பதிவில் கிராமத்தில் இயல்பையும், ஜிப்ரானின் இசையில் அதன் தன்மையையும் உணர முடிகிறது. தனி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரை அவமதித்த பல செயல்களை நாம் செய்திகளில் பார்த்து, படித்திருக்கிறோம். அவற்றை எல்லாம் இந்த கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் கதைக்குள் செல்ல நேரம் எடுத்துக் கொண்டது பரவாயில்லை, ஆனால் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கதை ஒரே இடத்தில் சுற்றுகிறது. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியது என்றாலும் நல்ல ஒரு கிளைமாக்ஸ். படம் முடிந்த பின் உண்மையில் பாதிக்கப்பட்ட சில தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாக்குமூலத்தை பார்க்கும்போது படத்தில் கிடைத்ததை விட வலியான ஒரு உணர்வு எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *