மேக்ஸ் (MAX) – விமர்சனம்

பிரமாண்ட தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு கன்னடத்தில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் “MAX”. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சுனில், சம்யுக்தா ஹார்னாட், சரத் லோகிஸ்தவா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

படத்தின் கதைப்படி, அர்ஜுன் aka MAX என்ற அதிரடியான ஒரு போலீஸ் அதிகாரி கிச்சா சுதீப், ஒரு சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர சென்னை வருகிறார். முதல் நாள் இரவு போதையில் காவலர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் அமைச்சர் வாரிசுகளை கைது செய்து காவல் நிலையத்தில் அடைக்கிறார். காவல் நிலையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத விதமாக அந்த இருவரும் இறந்துவிட, அந்த தகவல் கிச்சா சுதீப்பிடம் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மகன்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்து அமைச்சர் ஆட்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைக்கின்றனர். அவர்கள் இறந்ததை எப்படி மறைத்தார்கள்? அவர்களிடம் இருந்து எப்படி தப்பினார்கள்? கிச்சா சுதீப் எப்படி தன் காவலர்களை பாதுகாத்தார்? என்பதை கைதி படம் போல ஒரு இரவில் சொல்லி முடிக்கும் பரபர ஆக்ஷன் திரில்லர் தான் இந்த மேக்ஸ்.

கிச்சா சுதீப். போலீஸ் அதிகாரியாக அதகளம் செய்கிறார். அவர் தோற்றம், பாடி லாங்குவேஜிலேயே நம்மை அசரடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். ஒரு பெரும் படையே அவரை டார்கெட் செய்திருந்தாலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் அவர்களை டீல் செய்யும் விதம் அப்ளாஸை அள்ளுகிறது. நாயகனுக்கு ஜோடியாக நாயகி என இல்லாமல் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹோற்னாட் என இரண்டு பேரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சுனில் வழக்கம் போல ஒரு தாதாவாக வந்து போகிறார். இளவர்சு மற்றும் மற்ற காவலர்கள் அனைவருமே பதட்டத்தை காட்டிக் கொண்டே தங்கள் கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

கன்னட சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை இந்த அதிரடி ஆக்ஷன் படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் படத்துடன் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. முழுக்க முழுக்க இரவில் நகரும் இந்த படத்தை சேகர் சந்திரா ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறது.

அறிமுக படத்திலேயே இப்படி ஒரு பிரமாண்டமான மாஸ் கமர்சியல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா. கதை பெரும்பாலும் காவல் நிலையத்தை சுற்றி நடந்தாலும் எந்தவித அயற்சியும் வராத அளவுக்கு திரைக்கதையில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். பரபர திரைக்கதை படத்தின் கூடுதல் பலம். ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை படமாக்கிய விதமும் படத்தை மிக பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. நல்ல ஒரு தமிழ் மாஸ் கமெர்சியல் படத்தை பார்த்த உணர்வு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களும் நிச்சயம் தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *