வாழை 2 நிச்சயமாக எடுப்பேன் – மாரி செல்வராஜ் உறுதி!

பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 4வது படமான வாழை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகியது. சாதாரணமாக பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களை மைய கதாபாத்திரங்களாக வைத்து, கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினர் என திரும்பும் திசையெல்லாம் மிகப்பெரிய பாராட்டுகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையும் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மாரி செல்வராஜின் வலியை உணர்ந்தோம் என்பது தான் படம் பார்த்த அத்தனை பேருடைய ஒற்றை கருத்தாக இருந்தது. இந்த நிலையில் 25வது நாள் வெற்றி விழா மற்றும் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “வாழை படத்தை எப்படி ப்ரோமோட் செய்யப்போகிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த படத்தைப் போட்டு காட்டி அவர்களுடைய கருத்தை கேட்கலாம் என முடிவு செய்து அழைத்தோம். இந்த படத்தைப் பார்க்க நான் யாரையெல்லாம் அழைத்தேனோ அவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். படத்தைப் பார்த்த அனைவரும் இந்த படத்தை மக்கள் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். மாரி செல்வராஜின் படங்கள் தங்கு தடையில்லாமல் மக்களிடம் சென்று சேர்வதற்கு முக்கியமான காரணம் எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் தான். இந்த வாழை படத்தின் வெற்றி தமிழ் சமூகம் மாரி செல்வராஜை எந்த அளவிற்கு நம்புகிறது என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது.

ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் இந்த படத்தை கொண்டாடி இருக்கிறது. சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் இருந்திருக்கலாம், அவர்களையும் வெல்ல தான் நான் அடுத்தடுத்த படங்களில் முயற்சி செய்வேன். என்னுடைய படங்கள் மூலமாக அனைவரையும் வென்றெடுப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வாழை படத்திற்கு பின்பும் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நான் வாழை இரண்டாம் பாகத்தை எடுப்பேன். சிவனைந்தான் கதாபாத்திரத்தை வைத்து தான் வாழை 2 படத்தை எடுப்பேன். அதற்கு பின் ஒரு கதை இருக்கிறது. அது நீங்கள் என்னை புரிந்து கொள்ள உதவும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *