லெக் பீஸ் – விமர்சனம்!

நடிகர் விஜய்யின் நண்பர் மற்றும் நடிகர் என பெரும்பாலானோரால் அறியப்படுபவர் நடிகர் ஸ்ரீநாத். ஆனால் அவர் ஒரு இயக்குனரும் கூட. இதற்கு முன்பு முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் “லெக் பீஸ்”. மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகியோருடன் ஸ்ரீநாத் மற்றும் தயாரிப்பாளர் மணிகண்டன் என நால்வரும் கதையின் நாயகர்களாக நடிக்க, யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களை திருப்திப்படுத்தியதா இந்த லெக் பீஸ்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மிமிக்ரி கலைஞர் ரமேஷ் திலக், கிளி ஜோசியம் பார்க்கும் கருணாகரன், ஆவிகளுடன் பேசும் ஸ்ரீநாத், ஜவுரி முடி தொழில் செய்யும் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் என்ன பொழப்பு இது என்ற நிலையில் இருக்கும்போது, சாலையில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கண்ணில் பட, அதை எடுக்கும்போது பிரச்சினை. சரி அதை நாலவரும் பிரித்துக் கொள்வோம் என சொல்லி பாருக்கு கிளம்ப, அங்கிருந்து நண்பர்களாகிறார்கள். தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த இரவில் அந்த பாரில் இருந்து துவங்கும் ஒரு பிரச்சினை நூல் பிடித்தாற்போல அவர்களை எங்கு கொண்டு நிறுத்துகிறது, பிரச்சினையில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பதே இந்த ‘லெக் பீஸ்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகர்களாக நடித்த நால்வரின் கதாபாத்திர பெயர்களில் இருந்தே சேட்டையை துவக்கி விடுகிறார் இயக்குனர். அதன் பின் வரிசையாக ஒரு காமெடி பட்டாளத்தையே களம் இறக்கி, படம் முடியும் வரை ஒரு நகைச்சுவை அதகளத்தையே நடத்தி முடிக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத். மிமிக்ரி கோபி, திடீர் திருப்பதி, குயில் குமார், பேய் முருகேசன் என அவர்களின் பெயர்களும், அவர்களின் கதாபாத்திரங்களும் படத்தின் முக்கிய அம்சங்கள். கருணாகரன் தன் ஸ்டைல் காமெடியில் கலக்கி எடுக்கிறார். மணிகண்டன் ஒரு பிளே பாயாக ஆங்காங்கே காமெடியில் ரசிக்க வைக்கிறார். ரமேஷ் திலக் தன் நடிப்பால் ஸ்கோர் செய்ய, ஸ்ரீநாத் எமோஷனல் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

இவர்கள் நான்கு பேரும் கூட்டாக சுற்ற, யோகிபாபு இருந்த இடத்தில் இருந்தே ஒன் மேனாக தன் கவுண்டர்களின் மூலமும், காட்சிகளில் மூலமும் சிரிக்க வைக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் விடிவி கணேஷ் தெறிக்க விடுகிறார். ரவி மரியா, மொட்ட  ராஜேந்திரன் இருவரும் காமெடியில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்கள். மதுசூதன ராவ், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து என படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மாசாணியின் ஒளிப்பதிவு காமெடி படத்துக்கு ஏற்றதாக, கலர்புல்லாக இருக்கிறது. பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அனிருத் பாடிய பாடல் கொஞ்சம் தாளம் போட வைக்கிறது.

பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அதை நன்றாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத். காமெடி படம் தான் என்றாலும் அதில் இருக்கும் கிரைம் திரில்லர் அம்சங்களையும் நகைச்சுவையோடு அணுகியிருப்பது ரசிக்க வைக்கிறது. கதையை செட் செய்ய முதல் பாதி எடுத்துக் கொண்டு, இரண்டாம் பாதியில் இன்னும் விறுவிறுப்பாக பயணிக்க வைக்கிறார். ஒருவர் போனால் இன்னொருவர் என்ற ரீதியில் எங்கு திரும்பினாலும் காமெடியில் கலக்கி எடுக்க நட்சத்திர பட்டாளமே இருப்பதால் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *