லாந்தர் – திரை விமர்சனம்

எம் சினிமா புரொடக்ஷன் தயாரிப்பில் சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லாந்தர்’. விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா கௌடா, கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு பிரவீன் இசையமைத்திருக்கிறார். ஞானசௌந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த திரில்லர் படம் ரசிகர்களுக்கு திரில்லர் அனுபவத்தை வழங்கியதா? பரபரப்பான படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கோவையில் போலீஸ் ஏசிபியாக இருப்பவர் நாயகன் விதார்த். அவரின் மனைவி ஸ்வேதா டோரத்தி பயந்த சுவாபம் உடையவர், சின்ன சின்ன அதிர்வுகளுக்கே மயங்கி விழுந்து விடுபவர். அவரை குணப்படுத்தனும் சகஜமாக்க வேண்டும் என்பதற்காகவே நகரின் மையப்பகுதியில் அரசு கொடுத்த வீட்டை விட்டு விட்டு, ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் விபின், சஹானா என்ற இளம் தம்பதியினர். ஒரு நாள் இரவில் கோவை நகரில் யாரென்று தெரியாத ஒரு மர்ம நபர் வழியில் வருபவர்களை எல்லாம் தாக்கி விட்டுப் போக, அந்த தகவல் போலீஸ் அதிகாரி விதார்த்துக்கு தெரிவிக்கப்பட அவர் மனைவியை தனியாக விட்டு விட்டு கிளம்புகிறார். பயந்த சுபாவம் உடைய அவர் அந்த இரவு தன் பயத்தை போக்கி தனியாக எப்படி கழித்தார்? சாலையில் எல்லோரையும் தாக்கும் அந்த மர்ம நபர் யார்? அந்த இளம் தம்பதிக்கு இந்த கதையில் என்ன சம்பந்தம்? என்பதஏ இரண்டு மணி நேர திரைக்கதையாக விரிகிறது.

நாயகனாக விதார்த், போலீஸ் ஏசிபியாக தன் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார். போலீஸ் யூனிஃபார்மில் கச்சிதமாக பொருந்துகிறார். மனைவியுடன் காதல், சக போலீஸ்காரர்களை நன்றாக நடத்துவது, ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்காக இரங்குவது என தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி ஸ்வேதா டோரத்தி பயந்த சுபாவம் உடையவராக படம் முழுக்க வருகிறார். மேக்கப் கலையாமல் கடைசி வரை வருகிறார். விபின் காதலுக்காக கடைசி வரை நிற்கும் இளைஞராக மனதில் நிற்கிறார். மஞ்சுவாக வரும் சஹானா கௌடாவுக்கு நடிக்க நல்ல ஒரு வாய்ப்பு. தன்னால் முடிந்த வரை சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஞான சௌந்தர் ஒளிப்பதிவில் கோவையின் இரவு நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கார் சேஸ், ஃபைட், மழை உட்பட இரவு காட்சிகள் அனைத்துமே நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீன் இசை ஓகே ரகம். பின்னணி இசையில் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறார்.

இயக்குனர் சாஜி சலீம். விடியும் வரை காத்திரு படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படம். முழுக்க ஒரு இரவில் நடக்கும் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஒரு இரவில் நடக்கும் படங்களில் பெரும்பாலும் பர பர அம்சங்கள் இருந்தால் மட்டுமே ரசிகர்களை கட்டிப்போட முடியும். அப்படி இல்லாமல் சற்று தொய்வான திரைக்கதையாக அமைந்தாலும் ரசிகர்களை கவர முடியாது. அந்த வகையில் சில விஷயங்களை கதையில் வைத்து ரசிகர்களை கட்டிப் போட இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். கோவையை கதைக்களமாக தேர்ந்தெடுத்ததும் ஒரு நல்ல தேர்வு. கதையில் அவர் சொல்ல வந்த ஒரு மருத்துவ விஷயமும் கதைக்கு பொருத்தம். இரண்டு மணி நேரத்தில் ஒரு பரபரப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ள அவருக்கு ஓரளவு வெற்றியே கிடைத்துள்ளது. திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பான படமாகவே கொடுத்திருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *