கோழிப்பண்ணை செல்லதுரை – திரை விமர்சனம்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என யதார்த்தமான கிராமத்து வாழ்வியலை நம் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு இயக்குனர் தான் சீனு ராமசாமி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ராலும் வணிக ரீதியாக கைகொடுக்கவில்லை. தற்போது கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் அறிமுக நாயகன், யோகிபாபுவை மைய கதாபாத்திரங்களாக வைத்து அன்பை மைய இழையாக வைத்து யதார்த்த கதையை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வெற்றி கிடைத்ததா, இல்லையா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ராணுவத்தில் வேலை பார்க்கும் ரியாஸ் மனைவி ஐஸ்வர்யா தத்தாவுக்கு வேறு ஒருவருடன் கள்ள்த் தொடர்பு இருக்கிறது என சொல்லி அவரை பட்டாளத்தில் இருந்து வர வைக்கிறார் அக்கா. வந்து பார்க்கும் ரியாஸ் அவர்களை அடித்து துவைத்து கொலை செய்ய முடிவெடுத்து விடுகிறார். அங்கிருந்து தப்பித்து இருவரும் ஓடி விடுகிறார்கள். மனைவி ஓடிய பின் தன் பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு எந்த பாசமும் இல்லாமல் காணாமல் போகிறார். பாட்டியும் ஒரு கட்டத்தில் இறந்து விட, தங்கையை வளர்க்கும் பொறுப்பு சிறுவனிடம் வருகிறது. அவனும் கிடைத்த வேலைகளை செய்து காசு சேர்த்து தங்கையை எந்த குறையும் இல்லாமல் வளர்க்கிறார். அவருக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக இருக்கிறார் யோகிபாபு. நாயகன் ஏகனும் அவரது தங்கை சத்யாவும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். சத்யா கல்லூரியில் படிக்க, ஏகன் யோகி பாபுவின் கறிக்கடையில் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் சத்யாவுக்கு சிவா என்ற இளைஞருடன் காதல் மலர்கிறது. அதை தெரிந்து கொள்ளும் ஏகன் தன் அம்மா மாதிரி தங்கையும் தன்னை ஏமாற்றி விட்டாளே என கடுமையாக கோபம் கொண்டு அவனை ஓட ஓட விரட்டுகிறார். தங்கையுடனும் மனஸ்தாபமாக மாறுகிறது. தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றறினாரா? தன் அப்பா, அம்மாவை சந்திக்க நேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

அறிமுக நாயகன் ஏகன், முன்பே ஜோ உட்பட சில படங்களில் கதாபாத்திர நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் நாயகனாக முதல் படம். ஒரு புதுமுகம் போல் அல்லாமல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு என சொல்வதை விடவும் அவரது தோற்றமே அந்த கிராமத்து இளைஞரை பிரதிபலித்து பலம் சேர்க்கிறது. யோகி பாபு வழக்கமான காமெடியனாக இல்லாமல் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நல்ல ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். சில காட்சிகளில் நம்மை நெகிழ வைக்கிறார்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அண்ணன் தங்கை பாசத்தை காட்டு காட்சிகள் சிறப்பு. நாயகி பிரிகிடா சகா, நாயகனை காதலிக்கும் அவன் அன்புக்கு ஏங்கும் நாயகியாக வந்து போகிறார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு, நல்ல இயல்பான கிராமத்து அழகியாக மிளிர்கிறார். திண்டுக்கல் லியோனியின் மகன் சிவா தங்கை சத்யாவின் காதலராக நடித்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா கதாபாத்திரம் நல்ல அழுத்தமான கதாபாத்திரம். பவா செல்லதுரை, குட்டிப்புலி, ரியாஸ் ஆகியோரும்  நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மிக இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜா. ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னனி இசையும் கச்சிதம்.

மனித வாழ்வின் யதார்த்தத்தை திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. பரபரக்கும் ஆக்ஷன், வன்முறை படங்களுக்கு மத்தியில் இயல்பாய் அமர்ந்து எந்த சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போண்ட்ர ஒரு மனதை வருடும் படத்தை தந்து மனதிற்கு நெருக்கமான கதை மாந்தர்கள் மூலம் ஒரு நிறைவான அனுபவத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. ஒரு வாழ்வியல் அனுபவத்தை மிக இயல்பாக தந்திருக்கிறார் இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *