எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு சினிமாவின் மீது தனியாத தாகம் என்றுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் இன்றும் புதுப்புது முயற்சிகளை எடுத்துக் கொண்டு, தனக்கென ஒரு குழுவை அமைத்து சின்ன பட்ஜெட்டில் படங்களை கொடுக்கும் முயற்சியில் ஓயாமல் அவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் கூட டூரிங் டாக்கீஸ், ட்ராஃபிக் ராமசாமி, நையப்புடை, கேப்மாரி, நான் கடவுள் இல்லை என இயக்குனராகவே, நடிகராகவோ கதாசிரியராகவோ என ஏதாவது ஒரு வகையில் அங்கமாக இருப்பார். அப்படி அவர் நடித்திருக்கும் சமீபத்திய படம் தான் கூரன். நாயை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் வெற்றி பெற்றதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கொடைக்கானலில் சாலை ஓரமாக செல்லும் நாய் மற்றும் குட்டிநாய் செல்ல, அப்போது குடித்து விட்டு வண்டி ஓட்டிய ஒருவர் தன் காரை அதன் மீது ஏற்றி குட்டியை கொன்று விடுகிறார். அந்த நாய் காவல்நிலையம் சென்று நீதி கேட்க போராடுகிறது. அந்த நேரத்தில் 10 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழிலை விட்டு ஒதுங்கியிருக்கும் பிரபல வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர், நாயின் புகாரை காவல்துறையிடம் ஏற்க வைப்பதோடு, வழக்கு விசாரணையில் அந்த நாய்க்கு நீதியை பெற்றுத் தர வாதாடுகிறார். அந்த தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வழக்கறிஞராக தன்உரையாடல்களாலும், வயதுக்கு ஏற்ற தோற்றத்தாலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரின் முதிர்ச்சியான நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்துக்கு பலம். தன்னுடைய குட்டிக்காகவும், அதை தாண்டிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுநல நோக்கிலும் நீதி கேட்டு போராடும் நாயை படம் முழுக்க மிக அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நாய்க்கும், அதற்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள். நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரன், SAC-யின் வீட்டில் இருக்கும் இந்திரஜா ரோபோ சங்கர், காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா, எதிர் தரப்பு வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், நாய் மொழி ட்ரான்ஸ்லேட்டராக சத்யன், கதையின் முடிவில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான், காமெடி கலந்த வில்லனாக கவிதா பாரதி, குற்றவாளியாக நடித்த இயக்குனர் நிதின் வேமுபதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தங்கள் வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. மார்டின் தன்ராஜ் இந்த கதைக்கு தேவையான ஒளிப்பதிவை செய்துள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை காலத்தில் இருந்தே SAC-க்கு சட்டம், நீதித்துறை மீதான ஈடுபாடும், ஆர்வமும் அதிகம் என்பது அவர் படங்களை கவனித்தாலே தெரியும். இந்த படத்தில் சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, நாய் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சமம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் நிதின் வேமுபதியின் கதைக்கு திரைக்கதையும், ஷார்ப்பான வசனங்களும் கூடுதல் பலம். ராம நாராயணன் படங்களில் தான் இதற்கு முன் செல்ல பிராணிகள் எல்லாம் எல்லா சாகசங்களும் செய்யும். அந்த வகையில் இந்த படத்தில் நாய் ஒரு குட்டி நாய்க்காக நீதி கேட்டு செல்வதை படமாக்கியதை பார்க்கும்போது ஆச்சர்யம் எழாமல் இல்ல. லாஜிக் பார்க்காமல் பார்த்தால் நிச்சயம் குழந்தைகளோடு சென்று பார்த்து ரசிக்கலாம்.