கிங்ஸ்டன் – விமர்சனம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 100வது படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் தீராத நடிப்பு வேட்கையின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அவரின் 25வது திரைப்படம் தான் கிங்ஸ்டன். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ், ZEE  நிறுவனத்துடன் இணைந்து மிக பிரமாண்டமாக, அதாவது ஜிவி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார். கடல் பின்னணியில் நடக்கும் ஒரு ஹாரர் ஃபேண்டஸி படமான இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தூவத்தூர் என்ற கடலோர கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க போனால் யாருமே உயிருடன் திரும்புவதில்லை. பிணமாக மட்டுமே கரை ஒதுங்குகிறார்கள். இச்சம்பவம் தொடர்ந்து நடக்க, அந்த கிராமத்தை அச்சம் சூழ்கிறது. அத்துடன் இனி யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போகக் கூடாது என அரசாங்கம் உத்தரவிடுகிறது. இந்த சம்பவங்களுக்கு எல்லாம் காரணம் கடல் அடக்கம் செய்யப்பட்ட போஸ் என்பவரின் ஆன்மா தான் என்ற கருத்தும் கிராமத்தில் நிலவுகிறது. பல ஆண்டுகள் கழித்து மூன்றாம் தலைமுறையில் வாழும் ஜிவி பிரகாஷ் அந்த ஊரின் முக்கிய புள்ளியாக இருக்கும் தாமஸ் என்பவருக்காக தூத்துக்குடி கடலில் சென்று கடல் அட்டை இறக்குமதி செய்து தருபவராக இருக்கிறார். சொந்தமாக ஒரு படகு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைத்து வருகிறார் ஜிவி. ஒரு கட்டத்தில் தனது முதலாளி இறக்குமதி செய்வது கடல் அட்டை இல்லை, போதை பொருள் கடத்தல் என்பதை தெரிந்து கொள்ளும் கிங்ஸ்டன் அவரிடம் இருந்து விலகி எதிர்க்க ஆரம்பிக்கிறார். தூவத்தூர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்பி வந்து இது நாள் வரை சொல்லப்பட்டது எல்லாமே பொய், கட்டுக்கதை என்பதை நிரூபிக்கிறேன் என்று சொல்லி தன் நண்பர்களுடன் துணிந்து கடலுக்குள் செல்கிறார் கிங்ஸ்டன். கடலுக்கு போன கிங்ஸ்டன் மீண்டும் திரும்பி வந்தாரா..? கடலுக்குள் அமானுஷ்யம் இருப்பது உண்மையா? கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதை  சொல்வதே மீதிக்கதை.

ஜிவி பிரகாஷ். நாயகனாக 25வது படம். துடிப்பான இளைஞராக, துறுதுறு நடிப்பை வழங்கியிருக்கிறார். திவ்யபாரதி உடனான காதல் காட்சிகளிலும், ஆக்ரோஷமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். படகில்  நடக்கும் காட்சிகளிலும் நம்மை நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். திவ்யபாரதி, பேச்சிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜிவியுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தைப் போல நடிக்க அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இருந்தாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரையில் வந்து போகிறார். அழகம் பெருமாள், சேத்தன், சாபுமோன், இளங்கோ குமரவேல், நண்பர்களாக வரும் ஆண்டனி, அருணாசலம், ராஜேஷ் ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவும், எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கமும் படத்தின் மிகப்பெரிய பலம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட கடலில் நடக்கும் காட்சிகளை நம்பும்படி காட்சிப்படுத்த அவர்களின் உழைப்பு அபாரமானது. Prosthetic make up-ல் வரும் அந்த creature-ஐ உருவாக்கிய விதமும் சிறப்பு. ஷான் லோகேஷ் படத்தொகுப்பு ஒரு சில இடங்களில் படத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது, அதே நேரத்தில் சில இடங்களில் திரைக்கதையில் கொஞ்சம் தெளிவின்மையை உண்டாக்குகிறது. முதல் பாதி முழுக்க கதைக்கான செட்டப்பாகவே செல்கிறது. இரண்டாம் பாதி தான் மையக்கதையில் பயணிக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. ராசா ராசா பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்தை கூட்ட பேருதவி புரிந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ். முதல் படத்திலேயே VFX அதிகம் கொண்ட, கடல் பின்னணியில் உள்ள கதைக்களத்தை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. நல்ல கான்செப்டாக இருந்தாலும் திரைக்கதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். கதாபாத்திர தேர்வு, நடிகர்களை வேலை வாங்கிய விதம், படத்தை இயக்கிய நேர்த்தி என நல்ல ஒரு அறிமுகம் கமல் பிரகாஷ். சில குறைகளை மறந்து படத்தின் மேக்கிங் மற்றும் பிரமாண்டத்துக்காக நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *