கலன் – விமர்சனம்

இன்றைய சூழலில் தமிழகத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளின் முதன்மையான பிரச்சினை போதைப்பொருள் புழக்கம். அதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு, அதனால் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. அப்படி சில முக்கியமான பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “கலன்”. கிடுகு படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கியிருக்கிறார்.

படத்தின் கதைப்படி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு காளியின் தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பன் தங்கைக்கு கஞ்சா விற்கும் விஜய், கஞ்சா வேலுவால் பிரச்சனை வருகிறது. அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்யும் வேங்கை, அவர்கள் இடத்திற்கே சென்று அவமானப்படுத்தி விடுகிறார். அவன் உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகி விடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது.

அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க வேங்கையின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களம் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே மீதிக்கதை.

வெட்டுடையார் காளி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்குப் பிறகு எடுக்கும் அவதாரத்தில் காளியாக மிரட்டியிருப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். உழைப்பாளியாக, பாசம் மிக்க தம்பியாக நடித்திருக்கும் அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் கொலை வெறியை தெறிக்க விட்டிருக்கிறார். வில்லனாக சம்பத் ராம் மிரட்டியிருக்கிறார்.

கஞ்சா வியாபாரியாக போதை மிதக்கும் கண்கள், கையில் சுருட்டு என்று மிரட்டலான கதாபாத்திரத்தில், திமிரான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக நிமிர்ந்து நிற்கிறார் காயத்ரி. வில்லியாக தனது தனித்துவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். வேங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், தென் மாவட்ட இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பில் கர்ஜித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ், வேங்கையின் நண்பர்கள் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும்  தென் மாவட்ட மக்களை பிரதிபலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் அனைத்தும் தியேட்டர்களில் கொண்டாட்டம் தரும் பாடல்கள். குறிப்பாக “வெட்டுடையார் காளி..” பாடலும், அதை படமாக்கிய விதமும் மிகச்சிறப்பு. அனைவர் வீட்டிலும் ஒலிக்கும் பக்தி பாடலாகவும் அமையும். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் ஆகியோரது பாடல் வரிகள் அதற்கு துணை புரிந்திருக்கின்றன. ஜெயக்குமார் மற்றும் ஜேகே தென் மாவட்ட இடங்களை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இரத்தம் தெறிக்கும் கொலைகள், திருவிழா காட்சிகள் என எல்லாமே திரையில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

இயக்குனர் வீரமுருகன் சமூகத்தில் இப்போது நடக்கும் முக்கிய பிரச்சனையை கருவாக கொண்டு மிகப்பெரிய விழுப்புணர்வு படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக போதைப் பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் அவல நிலை மற்றும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அலறல்களை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், குற்றவாளிகளுக்கு எத்தகைய கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார். சில இடங்களில் சாதி ரீதியான குறியீடுகள் பல இருந்தாலும், அனைத்தையும் லாஜிக்கோடு திரைக்கதையில் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் வீரமுருகன், ஆன்மீகம் மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை திரை மொழியில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்கான ஒரு படமாக இருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வீரமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *