காழ் – திரை விமர்சனம்

முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் மிகவும் அரிது, அதுவும் அங்கு வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, குறிப்பாக தமிழர்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது, அவர்கள் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள், ஆசைகள், கனவுகள், ஏக்கம் போன்றவற்றை பேசும் படங்கள் வருவது மிகவும் அரிது. அந்த வகையில் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் காழ். பிக் பாஸ் யுகேந்திரன் வாசுதேவன் நடித்திருக்கும் இந்த படத்தை மோகன்ராஜ் எழுதி இயக்கியிருக்கிறார். செல்வா கதிரேசன், கிருஷிகா ஆனந்தராஜ் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் மோகன்ராஜூம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது, சொல்ல வந்த விஷயங்களை, உணர்வுகளை சரியாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தமிழரான யுகேந்திரன் ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழரான தன் மனைவி மிமி லியோனர்டுடன் வாழ்ந்து வருகிறார், அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் இருவரும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவு. அதற்காக கடுமையாக உழைத்து வங்கியில் கடன் வாங்கி அதை கட்டி முடிக்க திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் போலி ஆதாரங்களை வைத்து கடன் வாங்கி தருவதாக சொல்லி ஒரு தமிழர் அவரை மோசடி செய்து விட்டுப் போகிறார். வீடு கட்டப்படாமல் அடிப்படை வேலைகளோடு நின்று விடுகிறது. இன்னொரு புறம் ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வரும் சித்தார்த் அன்பரசு தன்னுடைய விசா காலம் முடிவடையும் நிலையில் இருக்க, அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற விண்னப்பிக்கிறார். அதற்கு $12,000 தேவைப்படுகிறது. அவருடைய காதலி நித்யா பாலசுப்ரமணியமும் தான் படித்துக் கொண்டிருப்பதால் என்னால் வாங்க முடியாது, நீ சீக்கிரம் PR வாங்கி விடு, இந்தியா போனால் நம் காதலை பிரித்து விடுவார்கள், இங்கேயே செட்டில் ஆகலாம் என சொல்லி பணத்துக்கு அவரும் ஏற்பாடு செய்கிறார். யுகேந்திரன் வீடு கட்டும் கனவு நிறைவேறியதா? சித்தார்த்தின் PR வாங்கும் கனவு நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

ஆஸ்திரேயாவிலேயே செட்டில் ஆகி விட்ட மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் கதையின் நாயகனாக மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். வீடு நின்று போன கவலை, ஏமாற்றப்பட்ட விரக்தி, அதையும் தாண்டி எப்படியும் கனவை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கி சீனு என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் மிமி லியானர்ட் இலங்கை தமிழ் பேசி அதிலேயே பாதி நடிப்பை ஈடு செய்கிறார். மிக யதார்த்தமான நடிப்பு.

புலேந்திரனாக வரும் சித்தார்த் அன்பரசு சராசரி வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை பிரதிபலித்துள்ளார். யாரையும் நம்பி விடும் அப்பாவித்தனம், தான் உழைத்து சேர்த்த தன் பணம் தனக்கு வேண்டும் என நிற்பது, பின் தான் ஆசைப்பட்ட வேலை கிடைத்த சந்தோஷம், தன்னை அறியாமல் செய்த தவறால் குற்ற உணர்ச்சியில் தவிப்பது என நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் காதலியாக வரும் நித்யா பாலசுப்ரமணியம் ஈர்க்கிறார். ஸ்வாமி என்ற கதாபாத்திரத்தில் உள்ளுக்குள் சாதிய உணர்வை வைத்துக் கொண்டு வாழும்  கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் அஷ்வின் விஸ்வநாதன். ஸ்டீபஃனாக வரும் கமல் கிருஷ்ணா, அவரது மகன் ஸ்ரீமிஜூன் நெகிழ வைக்கிறார்கள். ஃபெரோஸ் பாஷா, அருணா அற்புதம், மார்க் ராபர்ட்ஸ், ஆண்டனி ஃபொகாஸ் என நடிகள் அனைவரும் நல்ல தேர்வு.

ஹெல்வின் , சஞ்சய் அரக்கல் ஆகியோரின் இசை படத்தின் தனமிக்கு ஏற்ப படம் முழுக்க இழையோடுகிறது. வசந்த் கங்காதரன் ஒளிப்பதிவு ஆஸ்திரேலியாவை ரசிக்க வைக்கிறது.

பலரும் நினைப்பது போல வெளிநாட்டு வாழ்க்கை என்பது கார், பங்களா, ஆடம்பர சொகுசு வாழ்க்கை என்பது போல் இல்லாமல், தினமும் பல சவால்களையும், மன உளைச்சலையும் எதிர்கொள்ளும் ஒரு போராட்ட களமாகவே உள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ். இந்தியாவில் மக்கள் படும் எல்லாவித கஷ்டங்களையும் வெளிநாட்டு வாழ் மக்களும் அனுபவிக்கிறார்கள், பணத்துக்காக ஓடி ஓடி வேலை செய்வது, கிடைத்த வேலையை செய்வது என எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். எல்லோர் வாழ்விலும் ஆசை, லட்சியம், ஏமாற்றம் எல்லாமே இருக்கும் என்பதையும் கதையின் போக்கில் உணர்த்துகிறார். எதார்த்தமான நடிப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகள், தெளிவான திரைக்கதை, கட்டுக்கோப்பான இயக்கம் என கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக தந்துள்ளார் இயக்குனர். மோகன்ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *