JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய JSK சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் எஸ்.கே.ஜீவா கூறியதாவது:

“கோடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான JSK சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார். இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்” என்றார்.

குற்றம் கடிதல் 2 ஒரு த்ரில்லர் டிராமா வகை படம். தென்காசி, சிறுமலை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.

இப்படத்தில் JSK சதீஷ்குமார், பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பவல், பட்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *