ஜெய் நடிப்பில் உருவாகும் ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஒர்க்கர்!

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS) சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். யோகி பாபு மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாகிநீடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகும் இப்படத்தின் தலைப்பை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படம் குறித்து இயக்குநர் வினய் கிருஷ்ணா கூறுகையில், “முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் இதுவரை பார்த்திராத கற்பனை கதையாக சொல்வது இப்படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

இந்த படத்திலும் ஹீரோ, ஹீரோயின் இடையிலான காதல் அந்த காதலுக்கு வரும் பிரச்சனைகளை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் சொல்லியிருந்தாலும், வழக்கமான பாணியில் சொல்லாமல், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களால் யூகிக்க முடியாதபடி திரைக்கதை பல திருப்பங்களோடு பயணிக்கும். ஏன் இப்படி நடக்கிறது, இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பதை எந்த இடத்திலும் யாராலும் யூகிக்க முடியாது, என்பது உறுதி.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறோம். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்றார்.

4 பாடல்கள் மற்றும் 5 சண்டைக்காட்சிகளோடு உருவாக உள்ள ‘ஒர்க்கர்’ திரைப்படத்தின் காட்சிகளை சென்னை, பாண்டிச்சேரி, மைசூர், மங்களூர் ஆகிய பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *