தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘யங் ஸ்டார் ‘ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசும்போது, “இது எங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 26வது திரைப்படம். ரொம்ப ஸ்பெஷலான படம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதே தருணத்தில் அர்த்தமுள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற கனவும் இருக்கும். வெற்றியும், கனவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது கடினம். ஆனால் அது போன்றதொரு கமர்ஷியல் அம்சங்களும், கனவுகளும் இணைந்த படம்தான் ‘டிராகன்’. இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்தத் திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என மூன்று இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை கயாடு லோஹரை வரவேற்கிறேன். எங்கள் நிறுவனம் எமி ஜாக்சன் போன்ற ஏராளமான நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் இந்த நிகழ்விற்கு வரவில்லை என்றாலும் படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார்” என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “உங்களில் ஒருவனை இந்த மேடையில் நிற்க வைத்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு தற்போது வணிக எல்லையை கடந்து நட்பாக மாறி விட்டது. தயாரிப்பாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றி.
‘லவ் டுடே’ படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்றபோது என்னுடன் இணைந்து நடிக்க நடிகைகள் முன் வரவில்லை. என்னுடன் நடிப்பதை தவிர்க்க பல காரணங்களை சொன்னார்கள். சில நடிகைகள் மட்டும் தான் உங்களுடன் இணைந்து நடிக்க முடியாது, நான் உங்களை விட சற்று பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்.
என்னுடைய நிலை இப்படி இருக்க.. இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இயக்குநர் அஸ்வத், ‘உனக்கு ஜோடி அனுபமா பரமேஸ்வரன்’ என சொன்னார். அவர்கள் நடித்த பிரேமம் திரைப்படம் வெளியானபோது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பாடிய அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அனைவரிடமும் இயல்பாக பழகினார்கள். காட்சியிலும் அற்புதமாக நடித்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. கயாடு லோஹர் – தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை. படம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும், காட்சிகளுக்கும் ஒத்திகை பார்த்து, பயிற்சி எடுத்து, கடினமாக உழைக்கிறார்கள்.
மிஷ்கின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் சந்திக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு பரிசினை கொடுப்பார். என்னுடைய மேக்கப் உதவியாளருக்கு பிறந்தநாள் என்று கேள்விப்பட்டவுடன் தன் கையில் இருந்த கடிகாரத்தை பரிசாக அளித்து விட்டார். அவர் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய கிஃப்ட். அவர் இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு மிகப்பெரிய கிஃப்ட். கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் மட்டுமல்ல. படப்பிடிப்பு தளத்திலும் மாஸாகவும், கிளாஸ் ஆகவும் இருக்கிறார். படத்தில் நடிக்கும் போது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அவர் பழகும் போதும் அவருடைய திரைப்படங்களின் நடிக்கும் ஹீரோவை போல் தான் ஸ்டைலிஷாக இருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் – கோமாளி படத்தில் அவருடன் பணியாற்றும் போது எனக்குள் சற்று பயம் இருக்கும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார். இது அவர் மீது எனக்கு இருந்த பயத்தை அகற்றி மரியாதையை உருவாக்கியது. அவரை எப்போது பார்த்தாலும் எனக்காக நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என நினைக்கும் தந்தையை போன்ற உணர்வு தான் எழும். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சினேகா மேடம். படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிக்கும் போது அவரின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்தேன்” என்றார் .
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, “நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து ‘டிராகன்’ படத்தை தயாரித்ததுடன் மட்டுமில்லாமல் அடுத்த படத்தை இயக்குவதிற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ப்ரதீப் ரங்கநாதன்- இவருக்காக தான் இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற தொடங்கினேன். வெற்றி என்றால் என்ன, என்று கண்டறிவது தான் இப்படத்தின் கதை. நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து இந்த மேடையில் நிற்பதையும் வெற்றியாக கருதுகிறோம். ஆரம்பத்தில் அவர் ஒரு குறும்படத்தை இயக்கி அதை என்னிடம் காண்பித்தார். மூன்று நிமிட குடும்பத்தை அதனை இயக்கியவன் எப்படி திரைப்படத்தை இயக்குவான் என்று எண்ணினேன். ஆனால் ஆறு மாதம் கழித்து அவன் வளர்ந்து கொண்டு இருந்தான். அதை நான் கேட்டு என்னுடைய அறையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். என் வாழ்க்கையில் அன்பு என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அவர்தான் ‘உனக்கு பின்னால் வந்த அவன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறான். நீ இன்னும் காதல் …காதல் தோல்வி… என்று புலம்பிக்கொண்டு.. இங்கேயே உட்கார்ந்திருக்கிறாய் ‘ என உசுப்பேத்தினான். பிரதீப் படத்தை இயக்கியதால் தான் உத்வேகம் அடைந்து நானும் படத்தை இயக்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டினேன். ‘போர் தொழில்’ எனும் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவும் பிரதீப் இயக்கி விட்டாரே என்று எண்ணித் தான் அவனும் படத்தை இயக்கினான். அதனால் என்னை இயக்குநராக உருவாக்கியது பிரதீப் தான். ஆனால் இந்த மேடையில் நான் இயக்குநராகவும், அவர் நடிகராகவும் இருப்பது எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
‘லவ் டுடே’ படத்திற்கு முன் பிரதீப்பை உருவ கேலி செய்தவர்கள் எல்லாம் ‘டிராகன்’ படம் வெளியான பிறகு கொண்டாடுவார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருபவர் பிரதீப் தான். ‘டிராகன்’ படம் திட்டமிட்டபடி நிறைவடைந்ததற்கு என்னை விட பிரதீப் போன்றவர்களின் நேரந்தவறாமையும் ஒரு காரணம். பிரதீப் உண்மையிலேயே சிறந்த நடிகர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரதீப்பின் நடிப்பு படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும். நான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ரசிகன் அல்ல. நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ரசிகன். அதனால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தால் தான் ஏராளமான புதுமுக இயக்குநர்கள் வித்தியாசமான கதைகளுடன் உன்னை நாடி வருவார்கள். படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.