பயமறியா பிரம்மை – விமர்சனம்

69MM ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம ‘பயமறியா பிரம்மை’. ‘கே’ இசையமைத்திருக்கிறார். 87 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த படம் ரசிகர்களை கவருமா? பார்க்கலாம்.

படம் துவங்கும் முன்பே ஆரம்பத்திலேயே ஒரு சில வரிகளை இயக்குனர் ரசிகர்களுக்கு சொல்கிறார். அதில் மிக முக்கியமான வரி, “கவனமாக பார்க்கவும்” என்பது. அதை தாண்டி அவர் சொன்ன மற்றும் சில வரிகளை படிக்காமல் லேட்டாக வரும் ஆடியன்ஸுக்கு எதுவுமே புரியாது அல்லது படம் முடிந்தும் 1000 கேள்விகளுடனே வெளியில் வர வாய்ப்பு உண்டு. அதனால் அதை தவற விடாமல் கண்டிப்பாக பார்த்து விடுங்கள்.

படத்தின் கதைப்படி, பயமறியா பிரம்மை என்ற தலைப்புக்கு கீழேயே ஜெகதீஷின் வாழ்க்கை, கபிலனின் எழுத்துக்களில் என்று குறிப்பிட்டு ஆரம்பிக்கிறார். ஜெயிலில் இருக்கும் ஜெகதீஷ், 25 ஆண்டுகளில் 96 கொலைகளை செய்த ஒரு கொலையாளி. அவர் அந்த கொலைகளை ஒரு கலையாக பார்த்ததாக குறிப்பிடுகிறார். அவருடன் உரையாடும் எழுத்தாளர் கபிலன் பல விஷயங்களையும் அவரின் வாழ்வின் சில சம்பவங்களையும் கேட்டு விவாதம் செய்கிறார். அவரின் நோக்கம் என்ன என்பதையும், மனநிலை என்ன என்பதையும் தெரிந்து கொள்ள உரையாடுகிறார்” அதை தாண்டி என்ன ஆனது, ஏது ஆனது என்று சொல்வதற்கான கதை இல்லை.

ஒரு 6 சாப்டர்கள் மட்டும் ரசிகர்களாகிய நமக்கு காட்டப்படுகிறது. அவை எல்லாம் நான் லீனியர் முறையிலும், இயக்குனர் மேற்சொன்ன சில “Disclaimer” மூலமாகவும் நமக்கு திரையில் காட்டப்படுகிறது. திடீரென தியேட்டருக்குள் நுழைபவர்கள் குழம்பிப் போவது நிச்சயம். கவனமாக பார்க்கும் ரசிகர்களுக்கே கேள்விகள் எழ நிறைய வாய்ப்பு உண்டு.

கதையின் மைய மாந்தர்களாக ஜேடி மற்றும் வினோத் சாகர் இருக்க, அவர்கள் மூலம் விரியும் கதையில் மற்ற கதாபாத்திர நடிகர்கள் வந்து போகும் விதத்தில் சாப்டர் சாப்டராக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராகுல் கபாலி. குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், விஸ்வாந்த் என மற்ற நடிகர்கள் அனைவருமே தங்களால் இயன்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளம் மற்றும் திரைக்கதையின் தன்மையால் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்ற அளவுக்கே வந்து போவதால் நம்மில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறார்கள்.

இசையமைப்பாளர் கே படத்தின் தன்மைக்கேற்ப பின்னணி இசையை அமைத்திருக்கிறார். பல இடங்களில் சைலன்ஸ் விடப்பட்டிருப்பதும் படத்தை மேலும் மெருகேற்றுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் இயக்குனரின் சாய்ஸாகவே தெரிகிறது. பெரும்பாலான காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் யார் என்று கூட தெரியாத அளவுக்கு அதிகம் இருளில் உலவ விட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் ராகுல் கபாலி மனித மனங்களை, சைக்காலஜியை வைத்து வித்தியாசமான விஷயத்தை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஒரு கால கட்டத்தில் நாம் ரசித்த, அதீத ஆர்வம் கொண்டிருந்த ஒரு விஷயம் இன்னொரு கால கட்டத்தில் வெறுமையாக தெரியும். அது போன்ற ஒரு விஷயமாக இது தெரிகிறது. பல இடங்களில் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. கதை எங்கு நடக்கிறது, எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்ற பல்வேறு விஷயங்களால் ரசிகர்களை படத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. மைய கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்திய படம் என்பதால் ஒரு One dimensional ஆகவே படத்தை அணுக, அதுவும் ரசிகர்களை ஈர்க்க தவறி விடுகிறது. மொத்தத்தில் வித்தியாசமாக ஏதாவது பார்க்க வேண்டும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை ஒரு தடவை முயற்சிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *