அந்தகன் – திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பிரஷாந்தின் 50வது படமான இந்த படம் இந்தியில் வெளியான அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக். இந்த அந்தகன் ஒரிஜினல் பதிப்புக்கு நியாயம் சேர்த்ததா? தமிழ் ரசிகர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பார்வையற்ற இளைஞரான பிரஷாந்த் ஒரு திறமையான பியானோ கலைஞர். லண்டன் செல்ல வேண்டும் என லட்சியத்துடன் அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறார். உண்மையில் பிரஷாந்துக்கு பார்வைக்குறைபாடு கிடையாது, பார்வையற்றவர் போல நடிக்கிறார். இந்த நிலையில் ஒரு விபத்தில் பிரியா ஆனந்தை சந்திக்கிறார், அவருடன் நட்பு கிடைக்கிறது. அவரது தந்தையின் ரெஸ்டோ பாரில் பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது. அங்கு அடிக்கடி வரும் நடிகர் கார்த்திக் அவரது இசையில் மயங்குகிறார். தன் திருமண நாளில் தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புவதாகவும், அதற்கு பிரஷாந்தை வீட்டுக்கு அழைக்கிறார். அங்கு செல்லும் பிரஷாந்துக்கு பெரிய அதிர்ச்சி. கார்த்திக் இறந்து போய் கிடக்கிறார். அவரது மனைவி சிம்ரன், பிரஷாந்த் பார்வையற்றவர் என்பதால் அவர் முன்பே சடலத்தை அப்புறப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதையெல்லாம் பிரஷாந்த் தன் இரண்டு கண்களாலும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதன் பின் என்ன ஆனது? கார்த்திக்கை கொலை செய்தது யார்? பிரஷாந்த் என்ன செய்தார்? சிம்ரனுக்கு பிரஷாந்த் பற்றிய உண்மை தெரிந்ததா? என்பதே மீதிக்கதை.

டாப் ஸ்டார் பிரஷாந்த். பார்வையற்றவராக மிகச்சிறந்த நடிப்பு. இசைக்கலைஞராகவும் அச்சு அசலாக தெரிகிறார். எந்தவித அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாத ஒரு இயல்பான திரில்லர் திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பை வழங்கி நடிகர் பிரஷாந்தாக ஜெயித்திருக்கிறார். முதல் பாதியில் மாட்டிக் கொண்டு தவிக்கும்போதும், இரண்டாம் பாதியில் உயிருக்கான போராட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பு. அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் கொடுத்து வந்தாலே அவர் தான் என்றும் டாப் ஸ்டார், அவருக்கான இடம் கண்டிப்பாக அப்படியே தான் இருக்கும்.

சிம்ரன், யூகிக்க முடியாத ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். அவரின் செயல்கள் ஒவ்வொன்றும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கே ஷாக் கொடுக்கும் ரகம். அதுவும் பிரஷாந்தை அவர் படுத்தும் பாடு செம ரகளை. பிரியா ஆனந்த் மாடர்ன் இளம்பெண்ணாக பிரஷாந்தை காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். பொருத்தமான தேர்வு. கார்த்திக் நடிகராகவே படத்திலும் வந்து போகிறார். இயல்பான பழைய துறுதுறு கார்த்திக்கை கண் முன் நிறுத்துகிறார். சமுத்திரகனி தன் அசால்டான நடிப்பால் மிரட்டுகிறார். வனிதா விஜயகுமார் உடன் அவர் வரும் காட்சிகள் செம ரகளை. யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ரவி யாதவ் ஒளிப்பதிவில் காட்சிகளில் திரில்லர் படத்துக்கே உரிய நிதானமும், சஸ்பென்ஸூம் இழையோடுகிறது. அத்துடன் கதைக்கேற்ற ரிச்னெஸ் கிடைக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். என் காதல் பாடல் சிறப்பு. படத்தின் பிரமோஷன் பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.

படம் துவங்கும் முன்பே இரண்டு இயக்குனர்கள் மாறி கடைசியில் தியாகராஜனே இயக்குனராகி இருக்கிறார். அந்தாதூன் படத்தை சிதைக்காமல் அப்படியே ஜீவன் மாறாமல் கொடுப்பாரா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் இருந்தது. அதை அத்தனையும் தவிடு பொடியாக்கி இருக்கிறார் தியாகராஜன். கதாபாத்திர தேர்விலேயே 50% வெற்றியை உறுதி செய்த தியாகராஜன், அதை இயக்கிய விதம் மீதி வெற்றியை உறுதி செய்திருக்கிறது. அந்தாதூன் படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் பிடிக்கும், பார்க்காத ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். பிரஷாந்த் ரியல் கம்பேக் தான் இந்த அந்தகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *