1954-ல் வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் பழம் பெரும் நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் உருவாகி இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான் “அந்த நாள்”. அதே தலைப்பில் தற்போது உருவாயுள்ள, இளைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வீவீ கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷ்யாம், ஆத்யா பிரசாத், லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி, சஞ்சய் ராகவன் மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் இந்த படம் ஒரு ஹாரர் திரில்லர் வகையை சார்ந்தது. சாத்தான் வழிபாடு மற்றும் மனித நரபலி என்ற சர்ச்சையான ஒரு விஷயத்தை எடுத்து அதற்கு திரைக்கதை அமைத்து எடுத்திருக்கிறார்கள். அந்த நாள் தலைப்பின் பெருமையை காப்பாற்றியதா? பார்க்கலாம்.
படத்தி கதைப்படி, நாயகன் ஆர்யன் ஷ்யாம் தன்னுடைய புது படத்தின் கதை விவாதத்திற்காக தன் உதவி இயக்குனர்களான ஆத்யா பிரசாத், லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், தயாரிப்பாளரின் உறவினர் ராஜ்குமார், சமையல்காரர் இமான் அண்ணாச்சி ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு போய் தங்குகிறார்கள். ஹாரர் படம் என்பதால் கதை விவாதத்தின் போது ஓஜா போர்டை வைத்து விளையாடுகிறார்கள். அப்போது நடக்கும் சில சம்பவங்கள் அவர்களை புரட்டி போடுகிறது. அப்போது அங்கு ஒரு கேமரா கிடைக்க அதில் ஒரு குடும்பம் அதே இடத்தில் ஒரு நாள் முன்பு தங்கி இருந்ததும், அவர்களை யாரோ துரத்தி துரத்தி கொலை செய்வது போலவும் வீடியோ இருக்கிறது. அதே முகமூடி போட்ட நபர் இவர்களையும் தாக்க வர, அனைவரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்தார்களா? முகமூடி போட்ட அந்த மர்ம நபர் யார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஆர்யன் ஷ்யாம், அறிமுக நடிகர். அவர் கொடுக்கும் சில ரியாக்ஷன்களிலேயே ஒரு சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். அவர் கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள முடியாத வகையில் நுணுக்கமான நடிப்பு. நடிப்பை தாண்டி கதை திரைக்கதையில் அவரின் பங்கும் பெரும் பங்கு. குறிப்பாக இந்த கதைக்காக அவரும் இயக்குனருடன் செய்திருக்கும் ரிசர்ச் ஒர்க் அதிகம்.
நாயகி ஆத்யா ஆரம்ப காட்சிகளில் கலகலவென இருக்கிறார். அதன் பின் கதையின் போக்கில் பதட்டம், பயம் போன்றவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். லிமா பாபுவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இமான் அண்ணாச்சி, கிஷோர் ராஜ்குமார் அடிக்கும் காமெடிகள் பெரிதாக ரசிக்க முடியவில்லை. ராஜ்குமார் கதாபாத்திரமும் அவ்வளவாக ஒன்ற முடியவில்லை. சில காட்சிகளில் வரும் சஞ்சய் ராகவன் மனதில் நிற்கிறார்.
சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவில் இரவு காட்சிகளில் திகில். பாரநார்மல் ஆக்டிவிட்டி படத்தில் வருவது போல கேமரா காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. ராபர்ட் சற்குணம் பின்னணி இசை முதல் பாதியில் ஓகே, இரண்டாம் பாதியில் சிறப்பு.
இயக்குனர் வீவீ கதிரேசன், 1:38 மணி நேரத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு கதையை சொல்ல எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. அதற்காக அவர்கள் செய்திருக்கும் ஆராய்ச்சியும் அபாரம். ஆனாலும் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு படத்தில் இருந்து நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. குறிப்பாக முதல் பாதியில் அவர்கள் அந்த கெஸ்ட் ஹவுஸ் சென்று அங்கு மாட்டிக் கொள்வது வரை கொஞ்சம் சுமாராகவே செல்கிறது. கதையின் முக்கிய அம்சம் வெளிப்படுவதில் இருந்து கதை வேகம் எடுக்கிறது. கடைசி அரை மணி நேரம் படத்தின் மிகப்பெரிய பலம். மனித நரபலி குறித்த விஷயம் இருப்பதால் சிலருக்கு பார்க்க அதிர்ச்சியாக இருக்கலாம். முதல் பாதியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் சிறப்பான படமாகவே இருந்திருக்கும் இந்த “அந்த நாள்”.