மீண்டும் இணைந்த சத்யஜோதி பிலிம்ஸ் & இளையராஜா கூட்டணி!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன் (1990), இதயம் (1991) ஆனஸ்ட் ராஜ் (1994) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி பல கல்ட் கிலாசிக் படங்களை வழங்கி, ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி, பழைய அற்புத நினைவுகளை மீட்டெடுப்பதோடு, புதிய தலைமுறைக்கும் ஒரு வலுவான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D. D. பாலச்சந்திரன் இயக்கத்தில், நம் கிராமத்து மண்ணின் வாழ்வியல் மற்றும் சமூக உண்மைகளை பேசும் ஒரு அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணியாற்றும் இளைஞனாக அவர் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், கங்கை அமரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, திரையுலகில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை ரோஜா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இவர்களின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிராமத்து பின்னணியில், சமூகத்தில் நிகழும் அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் D.D பாலச்சந்திரன். இது ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்ட, உணர்ச்சி பூர்வமான மற்றும் வலுவான கதையாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மொத்தத்தில், பழைய வெற்றி கூட்டணி, புதிய தலைமுறை கதை, சமூக பின்னணி என இந்த மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *