காதலிக்க நேரமில்லை – விமர்சனம்

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி அதனை தொடர்ந்து காளி என்ற படத்தையும் பேப்பர் ராக்கெட் என்ற இணையத் தொடரையும் இயக்கியிருந்தார். அடிப்படையில் நல்ல ஃபீல் குட் கதைகளை கொடுக்கும் வெகு சில இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்நிலையில் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் ஜெயம் ரவியை வைத்து அவர் இயக்கியிருக்கும் காதல் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இந்த தலைமுறையில் காதல் எப்படி பார்க்கப்படுகிறது? காதல் எந்தெந்த பரிணாமங்களை எடுத்துள்ளது? என்பதையும் பல்வேறு தொடாத விஷயங்களையும் தொட்டிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா. இந்த காதல் படம் மக்களை சென்று சேர்ந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னையில் வசிக்கும் நித்யா மேனன், காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் ஆண் துணை இல்லாமல், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பி கர்ப்பம் அடைகிறார். பெங்களூருவில் வசிக்கும் ரவி மோகன் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத ஒரு இளைஞர். டிஜே பானுவை காதலித்து குழந்தை வேண்டாமென கன்வின்ஸ் செய்து நிச்சயதார்த்தம் வரை செல்கிறார். ஆனால் நிச்சயதார்த்தம் அன்று பானு அங்கு வராமல் இருக்க, காதல் முறிகிறது. ஆண் துணையில்லாமல் குழந்தை பெற நினைக்கும் நாயகி, குழந்தையே வேண்டாம் என நினைக்கும் நாயகன் என முரண்பட்ட எண்ணங்களை கொண்ட இவர்கள் சந்தித்தால் என்னவாகும், இந்த ஜோடி இணைந்ததா? என்பதே மீதிக்கதை.

ரவி மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு காதல் படத்தில், சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் கனகச்சிதம். குழந்தை வேண்டாம் என பிடிவாதமாக இருந்து தன் மகனுக்கே அப்பாவாக மாறும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். நித்யா மேனன் கதையின் மையம். அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தல் நடிப்பின் மூலம் நம்மை கவர்கிறார். ஆரம்பத்தில் குழந்தைத் தனமாக இருக்கிறாரே என நினைக்கும்போது கதையோட்டத்தில் அதற்கு நியாயம் சேர்க்கிறார். வினய் ராய் மிகத் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பானு, நல்ல தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். யோகிபாபு ஒன்லைன் கவுண்டர்கள் சிரிக்க வைக்கின்றன. லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

கேவ்மிக் யு. ஆரியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். காதல் கதைக்கேற்ற கலர்ஃபுல் விஷூவல்ஸை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் துள்ளலான பாடல்கள் இந்த படத்தின் இளமையை மேலும் கூட்டுகிறது. பின்னணி இசையில் நம்மை கதையுடனே ஒன்ற வைக்கிறார்.

இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் முற்போக்கான சிந்தனைகள் படம் முழுக்க பரவி இருக்கிறது. சிக்கலான கதைக்களம், டாபூ என்று சொல்லப்படும் பல விஷயங்களையும் கதையில் மிக இயல்பாக புகுத்தியிருக்கிறார். குழந்தை தேவையில்லை என நாயகன் சொல்லும் காரணம் வலுவானதாக இல்லை. ஆண் துணை இல்லாமல் நாயகி குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் காரணமும் ஓரளவுக்கு ஓகேவாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் முடிவெடுக்கும் காட்சிகளில் அவர் கதாபாத்திரம் கொஞ்சம் ஆர்வக்கோளாறானதோ என எண்ண வைக்கிறது. மொத்தத்தில் காதலில் வேறு ஒரு பரிணாமத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *