உயிர் தமிழுக்கு – திரை விமர்சனம்

இயக்குனர் அமீர் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதில் கடந்த சில ஆண்டுகளாகவே எப்போது திரைக்கு வரும் என திரையுலகில் பலரும் எதிர்பார்த்த படம் தான் உயிர் தமிழுக்கு. போஸ்டரை பார்த்த பலரும் இது ஒரு அதிரடி அரசியல் படம் என்றே நினைத்தனர். ஆனால் இது அரசியலை பகடி செய்யும் ஒரு அரசியல் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. அமீர் முதன்முறையாக காதல் மற்றும் காமெடி படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு அது ஒர்க் அவுட் ஆனதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டர் தொழில் செய்து வரும் அமீருக்கு, அரசியல்வாதி ஆனந்த்ராஜ் மகள் சாந்தினியை பார்த்த உடனே காதல். அவர் வார்ட் கவுன்சிலர் தேர்தலில் நிற்பதை பார்த்த அமீர் அவரை அடிக்கடி பார்க்கும் ஆசையில் தானும் ஒரு வார்டு மெம்பர் ஆகும் எண்ணம் வர இமான் அண்ணாச்சிக்கு வழங்கப்பட்ட சீட்டில் அமீர் தேர்தலில் நிற்கிறார். வார்டு கவுன்சிலராக வென்று மக்கள் செல்வாக்கையும் பெறுகிறார். கட்சியின் மாவட்ட செயலாளர் மனதில் அவர் ஒரு திறமையான அரசியல்வாதி என்ற நம்பிக்கையையும் பெறுகிறார். இந்த நிலையில் அமீர், சாந்தினி காதல் ஆனந்தராஜூக்கு பிடிக்காமல் போகிறது. அவரை யாரோ கொலை செய்ய, அந்த கொலைப்பழி எதிர்க்கட்சியான அமீர் மீது விழுகிறது. இதனால் சாந்தினி அமீரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தன் காதலிக்கு தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காக அமீர் எடுக்கும் முயற்சிகள் தான் மீதிக்கதை.

அமீர் இதுவரை நாம் பார்த்திடாத ஒரு ஜனரஞ்சகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சீரியஸாக பார்த்து பழகிப்போன அமீரை ஏனோ காமெடி காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. வடசென்னை ராஜனாக மிரட்டிய அமீருக்கு இந்த காதல் காமெடி படம் செட் ஆகலை என்று தான் சொல்லணும். ஆனாலும் படம் முழுக்க திரையில் வந்து கொண்டே இருக்கிறார், பேசிக் கொண்டே இருக்கிறார்.

நாயகியாக சாந்தினி அழகு. முதல் பாதியில் ஃபிளாஷ்பேக்கில் இளமையாக கியூட்டாக இருக்கிறார். இரண்டாம் பாதியில் அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டாக வேறு மாதிரி இருக்கிறார். படம் நீண்ட நாட்களாக எடுத்ததன் விளைவோ? ஆனாலும் அவர் சிரிப்பு அழகு. கோபமும் அழகு. நிறைய இடங்களில் லிப் சிங்க் மிஸ்ஸிங்.

ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், மறைந்த மாரிமுத்து என அவரவர் அவர் பங்கை சிறப்பாக செய்து விட்டு போயிருக்கிறார்கள்.

வித்யாசாகரின் இசையில் எம்ஜிஆர் பாடல் ரசிக்க வைக்கிறது. அதுவும் எஸ்பிபி குரலில் கேட்கும்போது இனிமை. படத்தை நீண்ட நாட்களாக எடுத்திருப்பது படத்தில் தெரிகிறது.

படத்தில் ஆங்காங்கே தமிழக அரசியல் களத்தை நையாண்டி செய்கிறார்கள். அதில் ஒரு சில ரசிக்க வைக்கிறது, சில காமெடிகள் திணித்ததை போன்ற உணர்வை தருகிறது. மொத்தத்தில் அரதப் பழசான கதையை எடுத்த இயக்குனர் ஆதம் பாவா, திரைக்கதையையும் பழசாகவே செய்திருப்பது படத்துக்கு மைனஸ். நாயகனுக்கு நாயகி மீதான காதல் என்ற ஒரே இடத்தையே கதை சுற்றுகிறது, நகரவே இல்லை என்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. இது போன்ற அரசியல் சட்டையர் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் போய் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *