தமிழ் சினிமாவில் எப்போதும் புதுமையை புகுத்தி ரசிகர்களின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை ஒரு போதும் கைவிடாதவர் புதுமைப்பித்தன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒவ்வொரு படமுமே இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சிகளே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான படம், ஒவ்வொரு ஜானரில் உருவான படம். கதையே இல்லாத படம், ஒரே நடிகர் நடித்த படம், சிங்கிள் ஷாட் படம் என அந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட ரசிகர்களை கவர்ந்தன. சில படங்கள் மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. சில படங்கள் மிகப்பெரிய பாராட்டுகளையும் பார்த்திபனுக்கு பெற்றுக் கொடுத்தது. அப்படி இந்த முறை அவர் இயக்கியுள்ள படம் டீன்ஸ். முழுக்க முழுக்க டீன் ஏஜ் சிறுவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவரும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முந்தைய படங்களை போலவே இந்த படத்தையும் மிக முக்கியமான ஒரு எக்ஸ்பெரிமெண்ட் படமாகவும், அதே நேரத்தில் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் படமாகவும் கொடுக்கும் பார்த்திபனின் முயற்சி வெற்றி பெற்றதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 12 சிறுவர்கள் தங்களுடைய மெச்சூரிட்டியை நிரூபிக்க வேண்டும், தாங்கள் இனியும் சிறுவர்கள் கிடையாது, தாங்களும் வளர்ந்தவர்கள் என்று ஏதாவது ஒரு விஷயத்தை செய்து தங்களுடைய மெச்சூரிட்டி நிரூபிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அப்போது ஒரு சிறுமி தன்னுடைய பாட்டியின் ஊரில் ஒரு கிணறு இருப்பதாகவும் 500 ஆண்டுகள் பழமையான அந்த கிணற்றில் பேய் ஒன்று இருப்பதாகவும் சொல்ல அதை பார்த்து விடலாம் என்று இவர்கள் பள்ளியில் இருந்து யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆகிறார்கள். போகும் வழியில் சாலை மறியல் ஒன்று நடக்க, பேருந்து செல்ல முடியாத சூழல். அங்கிருந்து இறங்கி குறுக்கு வழியில் நடந்து சென்று விடலாம் என்று நினைத்து கிளம்புகிறார்கள். அப்போது ஒரு தோப்பை கடக்கும் போது அங்கு நாய்கள் துரத்த அதிலிருந்து தப்பித்து ஓட ஒரு கேட்டை தாண்டி குதித்து செல்கிறார்கள். அப்போது அங்கே பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. கிளம்பிப் போன 13 பேரில் ஒருவர் பின் ஒருவராக சிலர் காணாமல் போகிறார்கள். இதனால் பயந்து போன அடுத்து என்ன செய்கிறார்கள்? அங்கிருந்து தப்பித்தார்களா? பதட்டத்தில் அவர்கள் செய்யும் செயல்களும், காணாமல் போன அந்த சிறுவர்கள் என்ன ஆனார்கள் அவர்களை கண்டுபிடித்தார்களா? அதற்கு காரணம் என்ன என்பதுமே மீதிக்கதை.
படத்தின் நாயகர்களே அந்த 13 சிறுவர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதை செய்தவர்களுமே அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அறிமுக காட்சியிலேயே அவர்களின் உரையாடல் மிகவும் ரசிக்க வைக்கிறது. இன்றைய கால 2k கிட்ஸ் வாழ்க்கை மற்றும் அவர்களின் மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளது. இந்த உரையாடல்களையும் இந்த காட்சிகளையும் இயக்குனர் பார்த்திபன் திரையில் கொண்டு வந்த விதமும் இது எழுதிய விதமுமே அவரின் மனம் இன்னும் இளமையாகவே உள்ளது என்பதை காட்டுகிறது. சிறுவர்கள் கிளம்பி அவர்கள் பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் நடக்கும் காட்சிகளில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனாலும் படம் கொஞ்சம் வேகமாகவே நகர்கின்றது. இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் அறிமுகம் ஆவதும், அதற்கு பின் என்ன நடந்தது, காணாமல் போன சிறுவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் திரும்பி சென்றார்களா போன்ற விஷயங்களை மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பார்த்திபன். யோகி பாபு படத்தில் திடீரென ஒரு சில காட்சியில் வந்துவிட்டு போகிறார். காமெடிக்காக என்று நினைத்து வைத்தார்களா என தெரியவில்லை. ஆனால் அவர் வரும் காட்சிகள் படத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வியாபார நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட கதாபாத்திரமாகவே அது நின்று விடுகிறது.
கேவ்மிக் யூ ஆரியின் ஒளிப்பதிவும், டி இமான் இசையும் படத்தின் மிக முக்கியமான பலம் என்றே சொல்லலாம். இமான் இசையில் அங்கங்கே வரும் பாடல்கள் படத்துடன் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. படத்தின் இறுதியில் வரும் ப்ரோமோஷனல் பாடல் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
முதல் பாதியில் டீன் ஏஜ் குழந்தைகளின் படமாகவே சென்ற படம், இரண்டாம் பாதியில் வேறு ஒரு தளத்துக்கு செல்கிறது. ஒரு சில விஷயங்கள் சாதாரண ரசிகர்களுக்கு புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் புலப்படாத விஷயமாகவே உள்ளது. அதனை தவிர்த்து விட்டு பார்த்தால் இரண்டு மணி நேரம் ரசிகர்களை எங்கேஜ் செய்யும் படமாகவே இருக்கிறது. பார்த்திபனின் வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸை அள்ளுகிறது. பரிசோதனை பார்த்திபனின் திரைவாழ்வில் இன்னொரு பரிசோதனை முயற்சி, உங்கள் டீனேஜ் குழந்தைகளுடன் சென்று கண்டிப்பாக ரசிக்கக் கூடிய படம் என்பது உறுதி.