Passion Studios சுதன் & The Route ஜெகதீஸ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹாராஜா’. வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நடிகர் பாய்ஸ் மணிகண்டன் பேசும்போது, “நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ட்ரைலரை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.
நடிகர் வினோத் சாகர் பேசும்போது, “நித்திலன் இயக்கிய புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் குறும்படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என முயற்சி செய்தேன், அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. விஜய் சேதுபதி சாரை பாரத்தால் நமக்குள் இருக்கும் சோம்பேறித்தனம் விலகி நாமும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். விருமாண்டியில் ரசித்த அபிராமி அவர்களுடம் நடித்தது மகிழ்ச்சி, அனுராக் காஷ்யாப் சாருடன் 10 நாட்கள் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.
நடிகை அபிராமி பேசும்போது, “விஜய் சேதுபதியின் 50வது படத்தில் நானும் ஒரு பார்ட்டாக இருப்பது மகிழ்ச்சி. அவருக்காகவே இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். அனுராக் காஷ்யாப் போன்ற புகழ்பெற்ற இயக்குனரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். நானும் ஒரு ரசிகையாக இந்த படத்துக்கு ஆவலாக காத்திருக்கிறேன்” என்றார்.
இயக்குனர் நித்திலன் பேசும்போது, “என் உதவி இயக்குனர்களுக்கு முதல் நன்றி. என்னை கூலாக வைத்துக் கொள்ள அவர்கள் வேலையை இழுத்துப் போட்டு செய்வார்கள். காந்தாரா இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். எடிட்டர் ஃபிலோமின்ராஜ் உடைய ஆதரவு எனக்கும் இந்த படத்துக்கும் மிகப்பெரிய பலம். தயாரிப்பாளர் சுதன் சார் செலவு செய்வதற்கு தயங்கவே மாட்டார், கதையின் மீது நம்பிக்கை வைத்தால் எல்லாமே செய்து கொடுப்பார். அபிராமி மேடம் தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பார். மம்தா ரொம்பவே ஸ்வீட்டான நடிகை. சேது அண்ணன் சொல்லி பாய்ஸ் மணிகண்டனை இந்த படத்தில் நடிக்க வைத்தேன். கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருந்தார். அனுராக் காஷ்யாப் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். ஷூட்டிங் போகப்போக அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்துப் போனது. விஜய் சேதுபதி அண்ணனின் 50வது படத்தை நான் இயக்குவது எனக்கு பெருமை. ஒருவரின் தேவையை அவர்களுக்கு தெரியாமலேயே புரிந்து கொண்டு உதவக் கூடியவர். இந்த கதையை விஜய் சேதுபதியை மனதில் வைத்து எழுதவில்லை. கதை உருவான பிறகு இவர் நடிச்சா நல்லா இருக்கும் என்ற வகையில் இந்த படம் உருவானது” என்றார்.
நடிகை மம்தா மோகன்தாஸ் பேசும்போது, “மஹாராஜா வெறும் சினிமா மட்டுமல்ல. அதையும் தாண்டி ஒரு உணர்வை கொடுக்கு படம். இந்த படம் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கதை என அனைத்தும் கலந்த கலவை. நான் நிறைய படங்களில், நிறைய நடிகத்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் விஜய் சேதுபதி சற்றே வித்தியாசமானவர். இந்த கதாபாத்திரமும், படமும் அவர் கேரியரில் மைல் கல்லாக அமையும். இயக்குனர் நித்திலனின் குரங்கு பொம்மை படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் அவரின் ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தை பார்த்து மிரண்டு போனேன். இந்த படமும் அப்படி ஒரு அழுத்தமான உணர்வை தரும்” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “ராமோஜி ராவ் அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டபோது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன். 2005-ல் புதுப்பேட்டை படத்தில் நடிக்க ராமோஜி ஃபிலிம் சிட்டி போகும்போது அவரின் விஷனை நினைத்து பிரமித்துப் போனேன். ஒரு சினிமாவுக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் அங்கு இருக்கும். அவரின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. என்னுடைய 25வது படமாக சீதக்காதி அமைந்ததும், 50வது படமாக மஹாராஜா அமைந்ததும் என் பாக்கியம். ரெண்டு படத்திற்கும் தயாரிப்பாளர் சுதன் தான் தயாரிப்பாளர். இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் சிஜே பாஸ்கர் ஆகியோருக்கு என் நன்றி. 50 படங்களை ஒரு மாலையாக கோர்த்தால் அதில் இவர்கள் அனைவரும் ஒரு பங்காக இருப்பார்ர்கள். நான் துபாயில் இருந்தபோது பாய்ஸ் படத்துக்கும், ஃபைவ் ஸ்டார் படத்துக்கும் ஃபோட்டோ அனுப்பியிருக்கிறேன். அப்படி பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டனை சென்னையில்
சில இடங்களில் பார்த்து வியப்பாக பார்த்திருக்கிறேன். அவரின் இண்டர்வியூ பார்த்து நித்திலனிடம் இவரை இந்த படத்துக்கு சிபாரிசு செய்தேன். மணிகண்டனிடம் எந்த வித குழப்பமோ, பதட்டமோ, பயமோ இல்லை, இந்த படம் என் கேரியரில் முக்கிய படமாக இருக்கும்” என்றார்.
இந்த சந்திப்பில் படத்தொகுப்பாளர் ஃபிலோமின்ராஜ், நடிகர் கல்கி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.