குழந்தைகள் முன்னேற்ற கழகம் – விமர்சனம்!

சகுனி என்ற ஒரு அரசியல் நையாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் சங்கர் தயாள். சகுனி கார்த்தியின் முந்தையை படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் இன்றும் அந்த படத்துக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அரசியல் பின்னணியில் பகடி செய்து படம் எடுப்பதில் இயக்குனர் சங்கர் தயாளுக்கு அலாதி பிரியம் போல. அப்படி இந்த முறை அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “குழந்தைகள் முன்னேற்ற கழகம்”. குழந்தை நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுக்கு உறுதுணையாக யோகிபாபு, செந்தில் போன்றோர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

படத்தின் கதைப்படி, அரசியல்வாதி யோகிபாபு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் வீட்டு வேலை செய்ய வந்த வட மாநில பெண்ணுடன் உறவாட, அவருக்கும் ஒரு மகன் பிறக்கிறான். அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட, அவரோ பானி பூரி கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார். பள்ளியில் படிக்கும் இந்த இரண்டு மகன்களுக்குமே அரசியலில் பெரிய இடத்தை பிடித்து, முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை. இப்படிப்பட்ட ஆசையுடன் இருக்கும் இவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? ஆசைப்பட்டதை அடைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

யோகி பாபு கதையின் நாயகன் என்று சொல்வதை விட அவரை படத்தின் வியாபாரத்துக்காக தான் நடிக்க வைத்திருப்பது தெரிகிறது. படத்தில் அவ்வப்போது சில காட்சிகளில் தலையை காட்டி செல்கிறார். ஒரு சில காமெடிகள் நன்றாக இருந்தாலும், சில காட்சிகள் படத்தோடு ஒன்றவில்லை. அவரது கேரக்டர் திடீர் திடீரென ஏதேதோ செய்கிறது. அவர் செய்யும் செயல்கள் தான் ஏன் என்று தெரியவில்லை.

கதையின் நாயகர்கள் இரண்டு சிறுவர்கள் தான். இமயவர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான். இவர்கள் இருவரும் ஆடும் பரமபத அரசியல் தான் கதையே. இருவருமே நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். முதல் படம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் இன்னும் மெறுகேறிய நடிப்பை கொடுப்பார்கள் என நம்பலாம். அவர்களுடன் பள்ளியில் படிக்கும் சிறுமி ஹரிகா பெடடாவும் நல்ல ஒரு நடிப்பையே தந்திருக்கிறார்.

நடிகர் செந்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அரசியல் கட்சித் தலைவராக நடித்துள்ளார். தலைமுடியை பற்றி அவர் பேசும் வசனம் அப்ளாஸ் அள்ளுகிறது. யோகி பாபுவுக்கு வில்லனாக ஒரு கதாபாத்திரத்தில் சுப்பு பஞ்சு, வழக்கம் போல நடித்திருக்கிறார். சித்ரா லட்சுமணன், மறைந்த நடிகர் மயில்சாமி, லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் சங்கர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை பரவாயில்லை. ஜெ.லக்‌ஷ்மண் ஒளிப்பதிவும் படத்துக்கு என்ன தேவையோ அதை தந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் மறைந்த இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியுள்ள கடைசி படம் இது. அரசியல் பகடி படங்கள் என்றாலே அவர் பெயரும் இருக்கும். அரசியல் போட்டி, குடும்ப அரசியல் போன்றவற்றை அரசியல் பகடி செய்து இந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். நகைச்சுவை படம் தான் என்றாலும் காமெடி பல இடங்களில் ரசிக்க வைக்கவில்லை. யோகி பாபு வரும் காட்சிகளும் ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் எதையும் யோசிக்காமல் ஒரு பொழுதுபோக்கு படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *