வேம்பு – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் தரமான படங்கள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே போல நல்ல படங்கள் என்று சொன்னாலே அதில் ஏதாவது ஒரு ஓரத்திலாவது ஷீலா ராஜ்குமார் மற்றும் ஹரி கிருஷ்ணன் பெயர் இடம் பிடித்திருக்கும். அப்படி நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடித் தேடி நடிக்கும் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ள படம் வேம்பு. அறிமுக இயக்குனர் வி. ஜஸ்டின் பாபு இயக்கியுள்ளார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கிருஷ்ணகிரியில் உள்ள கிராமப்புற சூழலில் வளரும் ஷீலா மற்றும் ஹரி இருவரும் மாமன் மகள், அத்தை மகன். வெற்றி ஃபோட்டோ ஸ்டுடியோவை நடத்தி வருகிறார் ஹரி. பெண்களை வீட்டோடு வச்சிக்கணும், வயசுக்கு வந்தா கல்யாணம் பண்ணிக் கொடுத்துடணும் என்ற கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஊரில் ஷீலாவை சிலம்பம் கற்றுக் கொள்ள அனுப்புகிறார் அவரின் தந்தை. ஒரு கட்டத்தில் ஹரி, ஷீலா இருவருக்கும் திருமணம் நடக்கிறது. சில நாட்களிலேயே மின்னல் தாக்கி ஹரிக்கு கண் பார்வை போகிறது. இந்த சூழலில் குடும்ப கஷ்டம் ஒரு புறம், தனது லட்சியம் தடைபட்டது மறுபுறம் என்ற சூழலில் தவிக்கும் ஷீலா அந்த சூழலை எப்படி எதிர்கொண்டார்? தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே மீதிக்கதை.

ஷீலா ராஜ்குமார் வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் நம் மனதில் பதிகிறார். வேம்பு என்ற அந்த கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறார். படம் முழுக்க அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அவர் எடுக்கும் முயற்சிகளும், முடிவுகளும் தான் மொத்த திரைக்கதை. நாயகனாக ஹரி கிருஷ்ணன். ஃபோட்டோகிராஃபராக நல்ல ஒரு முற்போக்கான, முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண் பார்வை இழந்தவராகவும் நம்மை பரிதாபப்பட வைக்கும் நடிப்பு. எம்.எம்.ஏவாக ஒரு சில காட்சிகளில் வரும் மறைந்த நடிகர் மாரிமுத்து தனக்கேயுரிய நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். நாயகியின் தந்தை, நாயகனின் தாய், ஃபோட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்யும் சிறுவன், செங்கல் சூளை முதலாளி என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

ஏ குமரன் ஒளிப்பதிவு மிக யதார்த்தமாக அந்த கிராமத்தை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறது. மணிகண்டன் முரளி இசையில் பாடல்களும் கேட்கும் ரகம் , பின்னணி இசையும் ஓகே ரகம்.

கிராமத்து பெண்ணுக்கு இருக்கும் லட்சியமும், அதற்கு ஏற்படும் தடைகளும் அதை உடைத்து எப்படி இலக்கை அடைகிறார் அந்த பெண் என்பதையும் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார். தான் தனக்கு பிடித்ததை செய்து கொண்டே இருக்கும்போது அதற்கான அங்கீகாரம் தானாய் கிடைக்கும் என்பதையும் அடிநாதமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பாபு. இறுதியில் பெரியாரின் தத்துவங்களையும் ஒலிக்க விட்டது நல்ல முயற்சி. மொத்தத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு படம் இந்த வேம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *