நாயகன் என்ற ஒரு கிளாசிக் திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு தந்த கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு இளையராஜா இசை, இந்த தக் லைஃப்க்கு ஏ ஆர் ரகுமான் இசை. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாயகன் பெயரை காப்பாற்றியதா? நாயகனை மிஞ்சியதா? இந்த தக் லைஃப்? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாசர் மற்றும் கமல்ஹாசன் சகோதரர்கள். டெல்லியில் கேங்ஸ்டர்களாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இசையே ஒரு மோதல் போக்கு இருந்து வருகிறது. ஒரு சூழலில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தந்தையை இழந்து தவிக்கும் சிறு வயது சிம்பு, அந்த கலவரத்தில் தன் தங்கையையும் தொலைத்து விடுகிறார். சிம்புவை தன்னுடன் அழைத்துச் செல்லும் கமல்ஹாசன், தன் சொந்த மகனைப் போலவே வளர்க்கிறார். தொழிலில் கமல்ஹாசனுக்கு வலது கரமாக நிற்கிறார் சிம்பு. ஒரு வழக்கில் சிறை செல்ல நேரும் கமல், சிம்புவிடம் சில காலம் பொறுப்பை ஒப்படைக்கிறார். தொழிலை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துகிறார் சிம்பு. சிறையில் இருந்து வந்த கமலை ஒரு கட்டத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் சிம்புவும், அவர்களின் உடன் இருக்கும் ஆட்களும். கமலை கொன்று அந்த இடத்தை கைப்பற்றுகிறார் சிம்பு. ஆனால் மீண்டும் உயிர் பிழைத்து வரும் கமல் மீண்டும் தன் சாம்ராஜ்யத்தை கைப்பற்றினாரா? அவரது குடும்பம் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கமல்ஹாசன். நாயகன் அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல ஒரு சிறப்பான நடிப்பை தந்து படத்தை பார்க்க வைக்கிறார். அபிராமி, திரிஷா என இரண்டு பேரிடமும் ரொமான்ஸ் செய்வது என அவர் கதாபாத்திரத்தின் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். துரோகத்தை உணரும் காட்சிகளிலும், தன் குடும்பம் இப்படி ஆகி விட்டதே என உடைந்து அழும் காட்சிகளிலும் நம்மை கலங்க வைக்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகன் சிம்பு. கமல்ஹாசனுக்கு இணையாக சரிசமமான காட்சிகளும், முக்கியத்துவமும் தந்திருக்கிறார்கள். அதை மிகச்சரியாக புரிந்து கொண்டு படத்தை தன்னால் முடிந்த வரை தூக்கி நிறுத்துகிறார். இருவேறு விதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதமும், எந்த அலட்டலும் இல்லாமல் மிக இயல்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் சிம்பு.
திரிஷா இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரம். மிகவும் சவாலான கொஞ்சம் சென்சிட்டிவான கதாபாத்திரம். அதை மிக அழகாக செய்து மனதில் பதிகிறார். கமல் மனைவியாக அபிராமி. கொஞ்ச நேரமே வந்தாலும் தன் நடிப்பின் மூலம் பலம் சேர்த்திருக்கிறார். அசோக் செல்வன் நல்ல துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியாக தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனாலும் கதாபாத்திரம் பெரிய அளவில் எழுதப்படாதது ஏமாற்றமே. மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தன் யதார்த்த நடிப்பால் சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார். படத்தில் மிக முக்கியமான சிறந்த காட்சிகளில் இவர் நடித்த காட்சிகளும் அடக்கம். நாசர் கதையில் திருப்புமுனையான ஒரு கதாபாத்திரத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்துள்ளார். சின்னி ஜெயந்த், ஜோஜூ ஜார்ஜ், பக்ஸ், வையாபுரி, வடிவுக்கரசி, சஞ்சனா ஆகியோரும் நன்றாகவே நடித்துள்ளார்கள்.
ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. ஆனா படத்தில் அவற்றை சரியாக உபயோகிக்காதது மிகப்பெரிய ஏமாற்றம். முத்தமழை பாடல் படத்திலேயே இல்லை, விண்வெளி நாயகா படம் முடிந்த எண்ட் கிரெடிட்டில் வருவதும் ஏமாற்றமே. பின்னணி இசையில் தரமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும் அதற்கேற்ற காட்சியமைப்புகள் இல்லாததால் அதற்கும் வாய்ப்புகள் குறைவு.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு படத்தின் ஆகப்பெரும் பலம். ஒவ்வொரு காட்சியும் மிக பிரமாண்டமாக, அழகாக, இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை படம் பிடித்த விதமும் அருமை.
நாயகன் என்ற ஒரு மிகச்சிறந்த படத்தை தந்த கூட்டணி எப்படியும் ஒரு சிறந்த படைப்பை தான் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கமான கேங்க்ஸ்டர் படமாகவே இந்த படம் அமைந்ததும், மிக மிக சுவாரஸ்யமே இல்லாத ஒரு படமாக அமைந்ததும் ஏமாற்றம். அடுத்து இது தான் என ரன்னிங் கமெண்டரி அடிக்கும் அளவுக்கு யூகிக்க வைக்கும் திரைக்கதை பலவீனம். செக்க சிவந்த வானம் போன்ற ஒரு ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கலாம், ஆனாலும் ஒரு சராசரியான படத்தை தந்து ஏமாற்றியிருக்கிறது நாயகன் ஜோடி. ஆனாலும் கமல், சிம்பு, மணிரத்னம் என்ற காம்பினேஷனுக்காகவே நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.