ஹாலிவுட்டில் பிரபலமான ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found footage) வகை திரைப்படங்கள் நிறைய வெளியாகியிருக்கின்றன. பெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. அதில் ஹாரர் திரில்லர் ஜானரில் பாரநார்மல் ஆக்டிவிட்டி, கன்னிபல் ஹோலோகாஸ்ட், ப்ளேய்ர் விட்ச், தே ஆர் வாட்சிங் என பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. தற்போது தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற அடைமொழியோடுவெளியாகியிருக்கும் படம் “மர்மர்”. ஹேமந்த் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன.
நடந்த சம்பவங்களை பதிவான கேமராவில் இருந்து எடுக்கும் காட்சிகளை ஒரு ஆவணமாக எடிட் செய்து வெளியிடும் படங்கள் தான் ஃபவுண்ட் ஃபூட்டேஜ். அப்படி ஒரு பதிவாக உருவாக்கப்பட்டிருக்கும் படம் மர்மர். சென்னையில் இருந்து 2 ஆண், 2 பெண் என 4 யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் உள்ள காத்தூர் கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் அமானுஷ்யம் நிலவுவதை அறிந்து அதை டாகுமெண்டரியாக எடுக்க கேமரா, லைட் செட்டப் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அங்கு உள்ளூரில் அவர்களுக்கு உதவியாக ஒரு பதின்ம வயது பெண்ணும் அவர்களுடன் செல்கிறாள். காட்டுக்குள் செல்லும்போது இருட்டி விட, அங்கேயே ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து தங்குகிறார்கள். அதன் பின் அங்கு நடக்கும் சம்பவங்களை திகில் அனுபவமாக கொடுத்திருக்கிறது படக்குழு.
படத்தில் அந்த 5 முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை இதுவரை வெளியில் எங்கேயும் காட்டாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறது படக்குழு. எல்லோருமே புதுமுகங்கள். ஆவணப்படத்தில் ஆங்காங்கே வந்து பேசி விட்டுப் போகும் அந்த ஊர் மக்களும் புதுமுகங்கள் தான். ஆனால் படம் முழுக்க நம்மை சீட்டில் உட்கார வைக்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த நடிகர்கள் பெயர் கூட தெரியாமல் படம் பார்த்தது புது அனுபவம். மெல்வின், ரிஷி, அவந்திகா, ஜென்னி, காந்தா என அந்த கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே அவ்வளவு இயல்பாக, யதார்த்தமாக நாம் ஒளிந்திருந்து சிலரை பார்த்து விட்டு வந்தது போன்ற அனுபவத்தை தருகிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த Mr.X, Ms.X யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. யுவிகா என்ற அந்த ஒரு நடிகையை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மொத்தத்தில் அவர்கள் அனைவருக்குமே பாராட்டுக்கள்.
தொழில்நுட்ப ரீதியில் பார்க்கும்போது ஒளிப்பதிவும், சவுண்டும் படத்தின் ஆகப்பெரிய பலம். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், லைட்டிங்கும் படத்தின் அனுபவத்தை மேலும் கூட்டுகிறது. பல காட்சிகளில் கேமராவை யார் ஆபரேட் செய்வது, எங்கு லைட் இருக்கிறது, வெறும் கேம்ப் ஃபயர், நிலவு வெளிச்சத்திலேயே படமாக்கியிருக்கிறார்களா? என்ற ஆச்சர்யத்தையும் தந்திருக்கிறது. கெவின் ஃபிரடெரிக் ஒலி வடிவமைப்பும் படத்தில் நமக்கு அவ்வப்போது ஜம்ப்ஸ்கேரை தருகிறது. காட்டுக்குள் நாமும் அவர்களுடன் பயணித்த உணர்வை தந்துள்ளது. இந்த காட்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கிய எடிட்டர் ரோஹித் பணியும் பாராட்டுக்குரியது.
இயக்குனர் ஹேமந்த் நாராயணன் புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் நோக்குடன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு உண்மைச் சம்பவமோ என எண்ணும் வகையில் நல்ல ஒரு திகிலான அனுபவத்தை தந்துள்ளது. நீளத்தை மட்டும் ஒரு 20-30 நிமிடங்கள் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நிச்சயம் திரையரங்கில் சென்று அனுபவிக்கக் கூடிய நல்ல ஒரு திரை அனுபவமாக அமைந்துள்ளது இந்த மர்மர்.