அம்…ஆ – விமர்சனம்!

மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இன்னும் சில இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அம்..ஆ… திலீஷ் போத்தன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை காபி புரொடக்‌ஷன்ஸ் (Kaapi Productions) தயாரிக்க, தாமஸ் செபாஸ்டியன் இயக்கியுள்ளார். தற்போது தமிழிலும் அதே பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மலையாளத்தை போலவே தமிழிலும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஸ்டீபன் எனும் ரோடு காண்ட்ராக்டர்  கவந்தா எனும்  ஒரு மலை கிராமத்திற்கு சென்று அங்கு அதற்கான பணிகளை துவங்கும் வேலையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில் ரோடு வேலையை விட அங்குள்ள மனிதர்களை பற்றி அதிக ஆர்வத்துடன் விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் அங்கு சென்றது ரோடு வேலையாக அல்ல, வேறு ஒருவரைத் தேடி என்பது தெரிய வருகிறது. அந்த மலை கிராமத்தில் வெகு சில மனிதர்களே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நான்கைந்து வயதுடைய ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷனி. அவர்கள் யார்? அவர்களுக்கும் திலீஷ் போத்தனுக்கும் என்ன சம்பந்தம்? திலீஷ் என்ன வேலையாக அங்கு வந்தார்? என்பதே மீதிக்கதை.

திலீஷ் போத்தன் வழக்கம் போல தன் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். அறிமுக காட்சிகளிலும், அதன் பின் வரும் காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி நடித்து ஸ்கோர் செய்கிறார். தேவதர்ஷினி கதையின் மையக் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடல்நிலைக்கு மத்தியிலும் அந்த குழந்தைக்காக கஷ்டப்படும் காட்சிகளாகட்டும், எப்படியாவது குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற அவரது தவிப்பு என நடிப்பில் நம்மை நெகிழ வைக்கிறார். தாய்மையின் தவிப்பை நம்மை உணர வைக்கிறார்.

ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து விட்டு போகிறார்கள்.

கோபி சுந்தர் இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. எமோஷன், திரில்லர் என காட்சிகளுக்கு தகுந்த வகையில் நம்மை அழைத்து செல்கிறது அவரது இசை. அனிஷ் லால் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமங்களின் அழகு நம்மை கொள்ளை கொள்கிறது.

தாயின் பாசத்தை சொல்லும் இந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன். ஒரு ட்ராமாவாக தொடங்கி, நடுவில் திரில்லர் மோடில் பயணித்து இறுதியில் ஒரு எமோஷனல் படமாக முடிந்து நமக்கு ஒரு முழுமையான உணர்வை தருகிறது. வாடகைத்தாய் பற்றிய சில விஷயங்களை சொன்ன விதமும், அதில் சில நேரங்களில் நடக்கும் பிரச்சினைகளையும் வித்தியாசமாக சொல்லியிருக்கிறார். இது போன்ற சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு உணர்வுப் பூர்வமான படங்கள் அவ்வப்போது வருவது ரசிகர்களுக்கும் சினிமாவுக்கும் மிக முக்கியமானது. கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *