பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இந்த தங்கலான் – ஜிவி பிரகாஷ்!

சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரி கிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார், இயக்குனர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜீ.‌வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “இந்த திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌ பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய  முயற்சி செய்திருக்கிறேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் பசுபதி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்பு காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம் பா. ரஞ்சித். இந்த கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது. புது அணுகுமுறை. ரஞ்சித்தின் படங்களில் ஒரு புது தேடல் இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்தது.‌ அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது.‌” என்றார்.‌

நடிகை பார்வதி பேசும்போது, “நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை. ஜீ.வி.பிரகாஷின் இசை, ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு இந்த படத்தில் நனவானது. அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.‌ ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன். கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தேன். ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.‌

இந்த கங்கம்மா கதாபாத்திரம் மட்டுமல்லாமல் அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.‌  உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.  ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் – மீது பேரன்பு கொண்டவர் சீயான் விக்ரம். நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும். இதற்காக  விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும் போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து ரசித்திருக்கிறேன்.‌

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம்.  நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும் அது அரசியல். அந்த வகையில் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம், விடுதலை பற்றி நிறைய பேசுகிறோம்.  இதனை தொடர்ந்து பேச வேண்டும்.‌  பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்று குறித்தும் பேச வேண்டும். இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல். கலை என்பதும் அரசியல். இதற்காக ரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசும்போது, ”என்னுடைய கலை உலக பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.‌  இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்க வில்லை என நினைக்கிறேன். விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌ சக நடிகையை சௌகரியமாக, அக்கறையுடன், அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *