லவ் டுடே படத்தில் திருமணத்திற்கு முன்னால் காதலர்களின் மொபைல் ஃபோன்களை ஒரு நாள் மாற்றிக் கொண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கலகலப்பாக சொல்லியிருப்பார்கள். அந்த வகையில் திருமணமான ஜோடிகள் தங்கள் மொபைல்களை ரகசியம் இன்றி வெளிப்படையாக ஒரு நாள் வைத்துக் கொண்டால் என்னவாகும் என்பதை சொல்லும் படம் “ரிங் ரிங்”. லவ் டுடே போலவே இந்த படமும் தியேட்டரில் ரசிக்க வைக்கிறதா? பார்க்கலாம்..
படத்தின் கதைப்படி, பிரவீன் ராஜா பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியை வைக்கிறார். அவரது மனைவி சாக்ஷி அகர்வால் உடன், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப், ஜமுனா, அர்ஜுனன், சஹானா தம்பதிகள் அந்த பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். டின்னர் டேபிளில் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்கும்போது, விவேக் பிரசன்னாவை ஓவராக கலாய்க்க, ஈகோ அதிகமாகி உங்க செல்போன்களை ஓபனா வைங்க, உங்க தண்டவாளம் வண்டவாளம் ஏறிடும் என சொல்லி, செல்போன்களை மேஜை மீது வைக்க சொல்கிறார். எந்த செல்போனில் கால், மெசேஜ் வந்தாலும் பொதுவில் படிக்க வேண்டும், ஸ்பீக்கரில் போட்டு கால் பேச வேண்டும் என்கின்றனர். இது அவர்கள் வாழ்வில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே மீதிக்கதை.
பிரவீன் ராஜா, சாக்ஷி அகர்வால், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப், ஜமுனா, அர்ஜுனன், சஹானா என நான்கு ஜோடிகள் தான் படத்தின் முதன்மை கதாபாத்திரங்கள் அல்லது அவர்கள் தான் முழுப்படமும். அதில் விவேக் பிரசன்னா மிக அதிகமாக ஸ்கோர் செய்கிறார். டேனியல் ஆன்னி போப் காமெடி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. பிரவீன் ராஜா கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். ஸ்வயம் சித்தா அழகும், நடிப்பும் அதீதம்.
பிரசாந்த் ஒளிப்பதிவு, படம் முழுக்க ஒரே வீட்டில் இருந்தாலும் ஓரளவு சலிப்பு ஏற்படாத வண்ணம் தன் ஒளிப்பதிவால் கட்டிப் போடுகிறார். வசந்த் இசைப்பேட்டையின் பின்னணி இசை படத்துக்கு பலம்.
இயக்குனர் சக்திவேல் நல்ல ஒரு யோசனையை சிறு பட்ஜெட்டில், ரசிக்க வைக்கும் விதத்தில் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் 12th Man என்ற ஒரு படத்திலும் இதே போல ஒரு கான்செப்ட், ஆனால் ஒரு கட்டத்தில் அது திரில்லர், இன்வெஸ்டிகேஷன் மோடுக்கு சென்று விடும். இந்த படம் கணவன் மனைவி அன்பு, அவர்களுக்குள்ளான காதல், நம்பிக்கை போன்ற விஷயங்களை மிக அழகாகவே பேசுகிறது. ஜோடிகள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தாலே எந்த பிரச்சினையும் இல்லை என்ற நல்ல ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒருவரின் செல்ஃபோனை மட்டும் எடுத்தாலே அவர்களின் முழு ரகசியமும் நம் கையில் என சொல்லும் காலகட்டத்தில் இந்த படம் மிக முக்கியமான படமாகவே இருக்கிறது.