மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள 3வது திரைப்படம் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எடிட்டர் சாபு ஜோசப் பேசும்போது, ” இயக்குநர் சாந்தகுமார் முதல் முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.
நடிகர் அருள்ஜோதி பேசும்போது, “‘மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். ‘மகாமுனி’ படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார்” என்றார்.
நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, “‘ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதை தான் இது. ‘மகாமுனி’ படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.
நடிகர் சுஜித் பேசும்போது, “சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடித்த சேஃப் ஜானரிலேயே படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், சாந்தகுமார் சார் அதை உடைக்க விரும்பி ‘ரசவாதி’ படம் எடுத்திருக்கிறார். படம் உங்களுக்குப் பிடித்தபடி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்போது, “இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோல தான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்று தான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.
இயக்குனர் சாந்தகுமார் பேசும்போது, “ரசவாதி என்ற சொல் இப்போது அதிகமாக புழக்கத்தில் இல்லை தான், ஆனால் முன்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். ரசவாதம் என்பது உலோக மாற்றம். அதுவே மனிதனின் மூளைக்கும் பொருந்தும். அதுதான் இந்த படத்தின் கதை. தமிழ் சினிமாவில் சித்த மருத்துவர் கதாபாத்திரம் அதிகம் இடம் பெறாததால் தான் அந்த கதாபாத்திரத்தை இந்த கதையில் வைத்தேன். அலோபதி டாக்டர்களை போன்றே பல இளைஞர்கள் சித்த வைத்தியம் படித்து விட்டு டாக்டர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகம் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கேரக்டருக்கு ஒரு அலோபதி டாக்டரை கொண்டு வர முடியும் என்கிற நிலையிலும் சித்த வைத்தியரை கொண்டு வந்தேன். எனது முந்தைய படங்களின் தரம் இந்த படத்திலும் இருக்கும், ஆனால் ஆனால் அவற்றின் கதை, களம் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது மூன்றாவது ஒரு புது அனுபவத்தை தரும். காதல், திரில்லர், ஆக்ஷன் என எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும்.
“மௌனகுரு’ படத்திற்கு பிறகு ‘மகாமுனி’ இயக்க ஒரு பெரிய இடைவெளி இருந்தது உண்மை தான், அது நானாக எடுத்துக் கொண்டது, முதல் படத்துக்கு முன் 14 ஆண்டுகள் போராடியதால் வந்த அயற்சி. அதனால் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். ஆனால் இந்த ரசவாதி படத்துக்கு இடைவெளி எதுவும் இல்லை. கொரோனாவால் சற்று தாமதமாகி விட்டது. இனி இந்த இடைவெளி இருக்காது. அடுத்தடுத்து படங்களை இயக்குவேன். தமிழைத் தவிர வேறு மொழிகளில் படம் இயக்கும் எண்ணம் இல்லை. எனக்கு தெரிந்த மொழி, என் தாய்மொழி தமிழிலேயே படம் இயக்குவேன். இதற்கு முன்பு கூட எனக்கு மௌனகுரு படத்தை தெலுங்கு, இந்தியில் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது கூட அதனை நான் ஏற்க மறுத்து விட்டேன். நான் விரும்பியபடி சுதந்திரமாக படம் எடுக்க தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறேன். வேறொருவர் தயாரிப்பாளர் என்பதால் முந்தைய படங்களில் நான் எடுக்க விரும்பிய சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. அதனால் தயாரிப்பாளர் ஆனேன். ஆனால் தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. அது ஒரு கடினமான வேலை, ஆனால் இந்த படத்தில் தயாரிப்பு என்பது எனக்கு ஒரு அனுபவமாக அமைந்தது” என்றார்.